மக்களவையில் செங்கோல் சர்ச்சை!

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 28 புதிய நாடாளு மன்றக் கட்டடம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. அதில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கபடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. மதச்சார்பற்ற இந்தியாவில், புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் ஹிந்து மத சடங்குகளின்படி சகல பூஜைகளை செய்து, செங்கோலை ஏந்தி ஆதீனங்களுடன் அவைக்குள் நுழைந்து மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் அதை நிறுவி னார் பிரதமர் மோடி.
மன்னராட்சி முடிந்து, ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்து, அரசமைப்புச் சட்டப்படி ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் எதற்கு மீண்டும் மன்னராட்சியின் செங்கோல் என எதிர்க்கட்சிகள் பலவாறு கேள்வியெழுப்பின. இருப்பினும், செங்கோல் என்பது தமிழ் கலாசாரம், நீதியின் சின்னம், அது ‘புனித’மானது என பல்வேறு விளக்கங்களை அடுக்கியது பா.ஜ.க அரசு.
இவ்வாறாக, 17 ஆவது மக்களவை முடிந்து 18 ஆவது மக்களவை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருக்கும் சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சவுத்ரி ஊடகத்திடம் இதுபற்றி பேசுகையில், “அரசமைப்புச் சட்டம் என்பது ஜனநாயகத்தின் சின்னம். ஆனால், பாஜக கடந்த ஆட்சியில் நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது. செங்கோல் என்பது மன்னரின் கையிலிருக்கும் தடி. மன்னராட்சிக்குப் பிறகு நாம் சுதந்திரமடைந்து விட்டோம். இப்போது, ​​வாக்களிக்கத் தகுதியான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கான அரசாங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். இப்போது, நாடு மன்னரின் தடியால் இயங்குமா அல்லது அரசமைப்புச் சட்டத்தின்படி இயங்குமா… எனவே, ஜனநாயகத்தைக் காப்பற்ற நாடாளுமன்றத்தில் செங்கோலை நீக்கி விட்டு அரசமைப்பை நிறுவ வேண்டும்” என்றார்.

பின்னர், தனது கட்சி நாடாளு மன்ற உறுப்பினரின் கருத்து குறித்து பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “செங்கோல் நிறுவப்பட்டபோது, ​​பிரதமர் அதற்குத் தலைவணங்கினார். ஆனால், இந்த முறை பதவிப் பிரமாணம் செய்யும்போது அதற்கு அவர் தலைவணங்க மறந்துவிட்டார். அதனால், எங்கள் கட்சியின் உறுப்பி னர், பிரதமருக்கு அதை நினைவூட்ட விரும்பினார் என்று நினைக்கிறேன்’’ என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஆதரித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “செங்கோல் என்பது மன்னராட்சியைக் குறிக்கிறது. அந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

எனவே, மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை நாம் கொண்டாட வேண்டும்” என்று தனியார் ஊடகத்திடம் தெரிவித்தார்.
அதேபோல், ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினரும், லாலு பிரசாத் மகளுமான மிசா பார்தியும், இந்தக் கோரிக்கையை யார் வைத்திருந்தாலும் அதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரின் இருக்கை அருகே “செங்கோல் நிறுவப்பட்ட போது, ​​பிரதமர் கீழே விழுந்து வணங்கினார். ஆனால், இந்த முறை பதவிப் பிரமாணம் செய்யும்போது, செங்கோல் அருகில் தான் இருந்தது. ஆனாலும், குறைந்த பட்சம் அந்தப்பக்கம் திரும்பி வணங்கவில்லை, அதே போல் அனைத்து பாஜக உறுப்பி னர்களும் வணங்கவில்லை. தற்காலிக அவைத்தலைவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் ஓம் பிர்லாவும் வணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *