பிற இதழிலிருந்து…இனியும் ‘நீட்’ தேர்வு தேவையா?

Viduthalai
2 Min Read

இப்போது ஒன்றிய-மாநில அரசுகளின் பணிக்கும், படிப்புக்கும் போட்டித்தேர்வு எழுதித்தான் செல்லமுடியும். இந்த தேர்வில் தில்லுமுல்லு நடந்தால், அது நல்ல எதிர்காலத்தை உருவாக்காது. திறமையுள்ளவர்கள் வெற்றிபெறவும் முடியாது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்விலும், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நியமனம் மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான ஒன்றிய அரசாங்கத்தின் உதவித்தொகை பெறுவதற்குமான ‘நெட்’ என்று சொல்லப்படும் தேசிய தகுதித்தேர்விலும் நடந்த குளறுபடிகள் இதற்கு எடுத்துக்காட் டாக இருக்கிறது.

‘நீட்’ தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவு வெளியே வந்தபோது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கூட மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கிவிடும். ஆனால் இந்தத் தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு நிறைய மாண வர்கள் உயர்மதிப்பெண்கள் மட்டுமல்லாமல், முழு மதிப்பெண் களையும் பெற்றிருந்தார்கள். இதனால் முறைகேடு நடந்திருக்கும் என்று பல மாணவர்கள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள். உடனே இந்தத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை விழித்துக்கொண்டது.

மேலும் சில காரணங்களுக்காக 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது என்று கூறியவுடன், பெரிய பிரச்சினைகள் கிளம்பியது. உடனே அதை ரத்து செய்து விட்டு, அந்த 1,563 பேருக்கும் சத்தீஷ்கார், குஜராத், அரியானா, மேகாலயா, சண்டிகாரில் உள்ள 7 மய்யங்களில் மறுதேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பதுதான் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதுதவிர,குஜராத், பீகார், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற குளறுபடிகள் நடந்ததாகவும் புகார்கள் வந்தன. மேலும் 110 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறது.
இதுபோல 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் எழுதிய ‘நெட்’ தேர்விலும் பல முறைகேடுகள் நடந்த தாக குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் வந்ததால், அந்தத் தேர்வும் ரத்துசெய்யப்பட்டு, சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் முதுகலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான நீட் தேர்வும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.இப்படியே நடந்துகொண்டிருந்தால், தேசிய தேர்வு முகமை இருந்துதான் என்ன பயன்?.

எனவே, தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் தேர்வர்களுக்கு நம்பிக்கையையும், உறுதியையும், வெளிப்படைத்தன்மையையும் ஏற்படுத்தும் வகையில் முழுமையான சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 2018-ஆம் ஆண்டு வரை பேப்பர்-பேனா மூலம் எழுதும் முறை இருந்தது. அதன்பின்னர், ஆன்லைன் தேர்வாக மாற்றப்பட்டதால், இத்தகைய புகார்கள் அதிகம் வரவில்லை. இந்த ஆண்டு ‘நெட்’ தேர்வில் பேனாவில் தேர்வு எழுதும் முறை மீண்டும் வந்தபிறகுதான், அதில் முறைகேடு சம்பவங்கள் வெளியே வந்துள்ளன.
ஒன்றிய-மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை தயாரிக்கும்போது ரகசியம் காக்கப்படுவதுபோல, இந்த தேர்வுகளுக்காக வினாத்தாள் தயாரிக்கும்போதும், திருத்தும்போதும், மதிப்பீடு வழங்கும்போதும் எந்த தவறும் ஏற்படாமல் முழுரகசியம் காக்கப்படவேண்டும். ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் கடுமையான சட்டத்தை அமல்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இவ்வளவு முறைகேடுகளையும் பார்க்கும்போது இனியும் நீட் தேர்வு வேண்டுமா? என்ற கருத்தே வலுப்பெறுகிறது. நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய இதுவே சரியான தருணம். இதேபோல மற்ற போட்டி தேர்வுகளுக்கும் சீர்திருத்தம் வேண்டும்.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம், 27.6.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *