இந்திரன் வந்தானா…. மழையைக் கொடுத்தானா?

Viduthalai
2 Min Read

ராமன் கோவில் கட்டி முடித்து ஜனவரி 22 ஆம் தேதி பிராணபிரதிஷ்டை என்ற பெயரில் தென் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை ராமன் பொம்மைக்கு ‘உயிரூட்டி’ பாலராமராக்கினார் மோடி.
கோவில் கட்டிய நாள் முதல் அயோத்தி பகுதியில் மழை பெய்யவில்லை. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அயோத்தியில் பெய்த சராசரி மழையால் ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்தது, சாலைகளில் சாக்கடைநீர் ஓடுகிறது, கோவிலுக்கு முன்பு மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. ராமன்சிலைமீது நீர் ஒழுகுகிறது.
இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரும், போஜ்புரி நடிகர் பவன் சிங்கின் சகோதரருமான ஆகாஷ் லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ‘‘கோவிலில் மழைநீர் ஒழுகுவது பெரிதுபடுத்தப்படுகிறது, உண்மையில் இது ஓர் அற்புத நிகழ்வு ஆகும்.

ராமநவமி அன்று சூரிய பகவான் ராமரை தரிசிக்க கர்ப்பக்கிரகத்திலேயே தனது கிரகணங்களைக் கொண்டு அவரை அபிசேகம் செய்து வழிபட்டார். அதே போல் தான் இந்திரதேவனும் மழைநீரை ராமபிரானின் மீது பொழிந்து வழிபடுகிறார்.
முந்தைய காலங்களில் மழைநீர் நேரடியாக சுவாமி சிலைமீது விழுவதுபோல் செய்திருப்பார்கள்; இப்போதும் சிவலிங்கத்தின் மீது எப்போதும் நீர் ஊற்றப்படுவது எதற்கு என்றால் சிவனின் உக்கிரத்தைத் தணிக்க இந்திரனின் செயலாகத்தான் புராணங்கள் கூறுகின்றன. அது போல் தான் ராமபிரானின் பாதங்களைக்கழுவி தரிசனம் செய்ய இந்திரன் வந்துள்ளார். இதை எல்லாம் கேள்வி கேட்பது மதவிரோதிகளின் செயல்’’ என்று ஆகாஷ் கூறினார்.

மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் இந்த ஆகாஷுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்க முடிவு செய்தார்கள். ஆனால் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்ததால் இவரது சகோதரர் பவன் சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்தனர். பவன் சிங் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வந்ததால் அவரே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்தது வட இந்தியாவில் உள்ள கடுமையான கோடையை குளிர்விக்கத்தான் என்று முசாபர்நகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ்பலியான் கூறினார். இதுவும் பேசு பொருளான நிலையில் தற்போது ஆகாஷின் பேச்சு நல்ல தமாஷாகத்தான் கருதப்படுகிறது.

கடவுள் என்ற ஒன்றைக் கற்பித்து, அதன் பெயரால் அறிவுக்குப் பொருந்தாத என்னென்ன பொய்களையும் பித்தலாட்டங்களையும் அரங்கேற்றுகிறார்கள் பார்த்தீர்களா?
செயற்கை மழையை அறிவியல் ரீதியாக வரவழைக்கும் ஒரு கால கட்டத்தில் வருண பகவான் என்றும், இந்திரன் என்றும் ராமனுக்கு இந்திரதேவன் மழை மூலம் அபிஷேகம் செய்கிறார் என்று கூறி, அவர்களால்தான் மழை பொழிவிக்கப்படுகிறது என்பது எல்லாம் எத்தகைய முரட்டுத்தனமான மூடநம்பிக்கையும், மோசடியுமாகும்.
ஹிந்து மதத்தில் குறிப்பிடப்படும் இத்தனை கடவுள்கள் இருந்தும், பல ஆண்டுகளில் மழை இல்லாமல் மக்கள் வறட்சியால் வாடுவது ஏன்? பட்டினிச் சாவுகள் நிகழ்வது ஏன்? ஏன்?
கருணையே உருவானவன் கடவுள் என்பது ‘கப்சா’ தானே! ஒரு பொய்யை மறைக்க எத்தனை எத்தனைப் பொய் மூட்டைகள்!
கடவுளும், மதமும் மூடநம்பிக்கைகளை வளர்க்கத்தான்! அப்பொழுதுதானே ஆதிக்கக் கூட்டம் பாமர மக்களைச் சுரண்டிக் கொழுக்க முடியும்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *