கருத்தியல் ரீதியாக இந்த மண்ணிலே பி.ஜே.பி. எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு – சங் பரிவார்கள் எதிர்ப்பு என்பது இங்கே ஆழமாக வேரூன்றி இருக்கிறது!
அதற்கு அடிப்படை பெரியார் இயக்கம்தான், திராவிட இயக்கம்தான், திராவிடர் கழகம்தான்!
இன்னும் வலுவாக அதை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்கிறது!
சென்னை, ஜூன் 23 கருத்தியல் ரீதியாக இந்த மண்ணிலே பி.ஜே.பி. எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு அல்லது சங் பரிவார்கள் எதிர்ப்பு என்பது இங்கே ஆழமாக வேரூன்றி இருக்கிறது தோழர்களே, அதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அடிப்படை பெரியார் இயக்கம்தான், திராவிட இயக்கம்தான், திராவிடர் கழகம்தான் என்பதையும் நான் பெருமையோடு பதிவு செய்யக் கடமைப்பட்டு இருக்கின்றேன். அதை நாம் ஓங்கி, உரக்கச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றோம். இன்னும் வலுவாக அதை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்கிறது. என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.
‘‘இனியும் தேவையா நீட்?’’
கடந்த 18.6.2024 அன்று மாலை சென்னை வள்ளு வர்கோட்டம் அருகில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘‘இனியும் தேவையா நீட்?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
மண்டல் பரிந்துரைக்கு முன் – மண்டல் பரிந்துரைக்குப் பின்!
மண்டல் பரிந்துரை நடைமுறைக்கு வந்தது என்பதுதான். இந்திய அரசியலின் போக்குகளை மண்டல் பரிந்துரைக்கு முன் – மண்டல் பரிந்துரைக்குப் பின் என்று நாம் பகுப்பாய்வு செய்து பார்க்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
மிக முக்கியமான ஒரு புள்ளி. அகில இந்திய அளவிலே ஓ.பி.சி. சமூகத்தினரை ஒருங்கிணைப்பதற்கு, இந்தப் புள்ளி தான் மிகமிக வலிமை வாய்ந்த ஒரு புள்ளியாக இருக்கிறது.
மண்டல் பரிந்துரைக்கு முன்பு இட ஒதுக்கீடு இருந்தது. எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு இருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்போடு அது நடைமுறையில் இருந்தது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா என்பது வேறு.
அதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு பெரிய துரோகங்களைச் செய்திருக்கிறார்கள்; சதிகளைச் செய்தி ருக்கிறார்கள் என்பது வேறு.
ஆனால், அதற்குக் கடுமையான எதிர்ப்பு என்பது வெளிப்படையாக இல்லை.
ரத்த வெறிக் கூச்சல் போட்டார்கள்; வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்!
வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்திலே, மண்டல் பரிந்துரை நடைமுறைக்கு வந்தது. அது நடைமுறைக்கு வந்த நொடியிலிருந்து உயர்ஜாதி அல்லது முன்னேறிய ஜாதி அல்லது பார்ப்பன பனியா போன்ற அடையாளங்களைக் கொண்ட ஜாதிகள் எவ்வளவு ஆவேசமாக வீதிக்கு வந்தார்கள்; வெகுண்டெழுந்தார்கள்; ரத்த வெறிக் கூச்சல் போட்டார்கள்; வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். அதன் பிறகு எப்படி அவர்கள் அரசியலை முன்னெடுத்தார்கள்; காய்களை நகர்த்தி னார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. நாம் விவாதிக்கவேண்டிய ஒன்று.
ஓ.பி.சி. சமூகத்தினருக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற குரல், நீண்ட காலத்துக் குரல் – அதற்கான போராட்டம் என்பது நாடு விடுதலைப் பெற்ற நாளிலிருந்தே தொடங்கி விட்டது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வெளியே வந்தபோது, அவர் சொன்ன காரணங்களில் இதுவும் ஒன்று.
‘‘ஓ.பி.சி. சமூகத்தினரின் நலன்களைப் பாதுகாப்பதற்கு என்று ஒரு ஆணையம் அமைக்கவேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களின் தலைமையிலான இந்த அரசு அதைப் பொருட்படுத்தவில்லை” என்ற குற்றச்சாட்டை வெளிப்படை யாக வைத்தார்.
காகாகலேல்கர் அவர்களின் தலைமையில் அதன்பிறகு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டும், அன்றைக்கு அது நடைமுறைக்கு வரவில்லை; கிடப்பிலே போட்டுவிட்டார்கள்.
அதன்பிறகு, நாடு தழுவிய அளவில், ஓ.பி.சி. மக்களின் சமூகநீதி குறித்த குரல் இன்னும் வலுவாக எழுந்த பிறகு, பி.பி.மண்டல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக வி.பி.சிங் அவர்கள் பிரதமரானார்.
மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்
அவர் பிரதமராவதற்கு, தமிழ்நாட்டிலிருந்து நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேராதரவாக நின்றார்கள்; திராவிடர் கழகம் பேராதரவாக இருந்தது என்பது வரலாறு.
ஆகவே, என்ன பாதிப்பு ஏற்படும்? எத்தகைய எதிர்விளைவு உருவாகும் – அதனால் ஆட்சி கவிழும் என்ப தெல்லாம் தெரிந்தும், அன்றைக்கு வாஜ்பேயி தலைமையில் இருந்த பி.ஜே.பி., வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில், அந்த ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் என்பது தெரிந்த நிலையிலும், ஆட்சியே பறிபோனாலும், மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவேன் என்று நடை முறைப்படுத்தியவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்.
அதன் பிறகு இந்திய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து நாம் விரிவாக விவாதிக்க வேண்டியி ருக்கிறது.
எப்படி ஆர்.எஸ்.எஸ். தீவிரமடைந்தது; சங் பரிவார் எப்படி வலிமை பெற்றார்கள். எப்படி அவர்கள் வெளிப்படையாக வந்து ஓ.பி.சி. மக்களுக்கு எதிரான காய்களை நகர்த்தினார்கள் என்பது மிகமிக முக்கியமானதாகும். அடிக்கோடிட வேண்டிய செய்தியாகும்.
முன்னேறிய வகுப்பினர் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று கூச்சல் போட்டார்கள்!
ஆர்.எஸ்.எஸ்.சும், பி.ஜே.பி.,யும், விசுவ ஹிந்து பரிசத்தும், இதர சங் பரிவார் அமைப்புகளும் வீதிக்கு வந்து மிகப்பெரிய அளவிற்குப் போராட்டங்களை நடத்தினார்கள்; அதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்தார்கள். முன்னேறிய வகுப்பினர் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று கூச்சல் போட்டார்கள்.
எல்லா தளங்களிலிருந்தும் முன்னேறிய வகுப்பினர் அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகிறது.
நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அந்த முன்னேறிய வகுப்பினரின் அதிகாரம் மெல்ல மெல்ல பறிக்கப்படுகிறது; அந்த எண்ணிக்கைக் குறைந்து வருகிறது.
ரத யாத்திரை – ரத்த யாத்திரையாக முடிந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்டது!
எல்லா இடங்களிலும் ஓ.பி.சி.யின் நுழைவு இருக்கிறது – உள்ளே நுழைகிறார்கள். இதைத் தடுக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் மிக முக்கியமான முனைப்பாக இருந்தது. அந்த அடிப்படையில்தான் அவர்கள் ஒருங்கிணைந்தார்கள். அதன் அடிப்படையில்தான் அத்வானி, ரத யாத்திரை என்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, அது ரத்த யாத்திரையாக முடிந்து, அந்த வேகத்திலேயே பாபர் மசூதி இடிக்கப்பட்டு – பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த சூழலிலேயே அவர்கள் முன்வைத்த அஜெண்டாதான் ஹிந்துத்துவா அஜெண்டா.
அதுவரையில் ஹிந்துத்துவா அஜெண்டா என்பது வெளி யில் பேசப்படாத ஒரு செயல் திட்டமாக இருந்தது.
ஓ.பி.சி.யை ஹிந்துக்கள் என்று அரவணைத்துக் கொள்ளவேண்டுமாம்!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அவர்கள் முன்வைத்த அரசியல், ‘‘ஓ.பி.சி.யை ஹிந்துக்கள் என்று அரவணைத்துக் கொள்ளவேண்டும். மறுபடியும் ‘பிராமணர்கள்’ அல்லது முன்னேறிய ஜாதியினர் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகி விடக்கூடாது.
இவர்களோடு இணைந்து நாங்களும் ஹிந்து – நீங்களும் ஹிந்து – நாமனைவரும் ஹிந்து – ஹிந்துப் பெரும்பான்மைவாதம் என்கிற அடிப்படையில் ஒன்று சேரு வோம்” என்கின்ற ஒரு புதிய குரல் – ஒரு புதிய செயல்திட்டம் – அப்படித்தான் அது முன்வைக்கப்பட்டது.
அந்த எலிப் பொறியில் போய்ச் சிக்கிய ஏராளமான ஓ.பி.சி. தலைவர்கள் – அரசியல் ஆதாயங்களுக்காக – ஒரு தற்காலிக ஆதாயங்களுக்காகச் சென்றனர்.
எல்லா மாநிலங்களிலும் அவர்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
எல்லா மாநிலங்களிலும் கொண்டு போய் பி.ஜே.பி.யை அறிமுகப்படுத்தினார்கள். பி.ஜே.பி.யின் கொடிகளை ஏற்று வதற்கு ஏற்பாடு செய்தார்கள். பி.ஜே.பி.யின் சின்னங்களை வீதிகளிலே, வீடுகளிலே, இல்லங்களிலே, சுவரிலே எழுதி னார்கள். எழுதியவர்கள் ஓ.பி.சி. தலைவர்கள் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
இன்றைக்குக்கூட தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை, ஒவ்வொருவரின் இல்லத்தின் சுவரிலும் பாரதீய ஜனதாவின் சின்னத்தை யார் வரைந்தது?
சின்னம் வரைவதற்கு அவர்களுக்கு ஏது ஆள்?
வாக்குச் சாவடியில் உட்காருவதற்கு அவர்களுக்கு ஏது ஆள்?
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உட்கார்ந்தவர்கள் யார்?
சின்னங்களை வரைந்தவர்கள் யார்?
அந்தக் கட்சி வேரூன்றுவதற்கு யார் துணை நிற்கிறார்கள்?
இவையெல்லாம் விவாதத்திற்கு உரியவையா, இல்லையா?
அவர்கள் வலுப்பெற வலுப்பெற எங்கே போய் இது முடியும்?
நீட் கொண்டுவந்தது என்பது அவர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகுதானே!
சமூகநீதியை நீர்த்துப் போகச் செய்வதற்குத்தான்!
எத்தனை எத்தனை தடைகள் சமூகநீதிக்கு எதிராக.
எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்ற சதி. ஏன் எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றார்கள்?
வெறும் பொருளாதார ஆதாயத்திற்காகவா?
இல்லை தோழர்களே, சமூகநீதியை நீர்த்துப் போகச் செய்வதற்குத்தான்.
அதைவிட முக்கியமாக ஓ.பி.சி. வலிமைப் பெறுவதைத் தடுப்பதற்காகத்தான்.
இந்த இட ஒதுக்கீட்டால் ஓ.பி.சி. சமூகத்தினர் இந்தியா முழுவதும் வலிமைப் பெற்று வருகிறார்கள். எல்லா தளங்களிலும் வலிமை பெற்று வருகிறார்கள்.
அவர்களின் ஆதிக்கம் ஆங்காங்கே பரவி வருகிறது என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதனைத் தடுக்கவேண்டும், ஓ.பி.சி. சமூகத்தினரை வைத்தே தடுக்கவேண்டும்.
ஓ.பி.சி. சமூகத்தினரை வைத்தே தடுப்பதற்காக அவர்கள் கண்டறிந்த ஒரு செயல் திட்டம்தான் ஹிந்துத்துவா அஜெண்டா.
நீண்ட நெடுங்காலமாக மகாத்மா ஜோதிபாபுலே காலம், அதற்குமுன்னதாக கவுதம புத்தர் காலம் – 2500 ஆண்டுகளாக தொடர்ந்து ‘‘எக்ஸ்க்ளூசன் ஆஃப் பிராமின்ஸ்” என்பதுதான் போராட்டமாக இருந்திருக்கிறது.
கான்ஷிராம் பகுஜன் யூனிட்டி என்று சொன்னார்
‘பிராமணர்’களை அல்லது அந்த ஆதிக்கச் சக்திகளை அந்நியப்படுத்துவது, அவர்களைத் தனிமைப்படுத்தி மற்றவர்களைப் பிரிப்பது – அவர்களை ஒருங்கிணைப்பது என்பதுதான் போராட்டமாக இருந்திருக்கிறது. அதுதான் அடிப்படைக் கருத்தியலாக இருந்திருக்கிறது.
அதைத்தான் கான்ஷிராம் பகுஜன் யூனிட்டி என்று சொன்னார். பகுஜன் என்று சொன்னால், தலித்துகள் என்று பொருளல்ல.
எஸ்.சி., எஸ்.டி., மைனாரிட்டிஸ், ஓ.பி.சி., அனைத்துப் பெண்களும் எல்லோரும் சேர்ந்ததுதான். இந்த சமூகங்களைச் சார்ந்தவர்கள் சமூகநீதிச் சமூகங்கள் என்று நான் அதைக் குறிப்பிட்டேன், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் – சமூகநீதிச் சமூகங்கள்.
பகுஜன் என்பது சமூகநீதிச் சமூகங்கள். இதனுடைய பொருள் என்ன? உயர்ஜாதி அல்லாத சமூகத்தினர் என்று பொருள். பார்ப்பனர் உள்பட உயர்ஜாதி சமூகத்தினர் என்று பொருள். இதுதான் போராட்டம்.
ஆனால், ஓ.பி.சி. சமூகத்தை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் தங்களின் நலனுக்காக, தங்களின் கட்சியின் நல னுக்காக – தற்காலிக பயனுக்காக – அவர்கள் பாரதீய ஜனதா வோடு சமரசம் செய்துகொண்டு, அவர்களை வளர்ப்பதற்கு இன்றைக்கு எல்லா மாநிலங்களிலும் தயாராகி விட்டார்கள்.
அவர்களின் குதிகாலை வெட்டுகின்ற மண் ஒரே மண் தமிழ் மண்தான் – தமிழ்நாடுதான்!
சந்திரபாபு நாயுடுவால் ஆந்திராவில் வேரூன்றி விட்டார்கள்; எடியூரப்பாவால், கருநாடகாவில் வேரூன்றி விட்டார்கள். சுரேஷ் கோபியின்மூலம் இன்றைக்குக் கேரளாவிலும் காலூன்றி இருக்கிறார்கள். அவர்களின் குதிகாலை வெட்டுகின்ற மண் ஒரே மண் தமிழ் மண்தான் – தமிழ்நாடுதான். இதுவரையில் அதை நாம் காப்பாற்றி வருகின்றோம். இந்த நொடிவரையில் அதில் நாம் சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாகத்தான் இருந்தி ருக்கின்றோம். இந்தத் தேர்தலில் எப்படியாவது 5, 6 இடங்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அவர்கள் மார்தட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது எங்கே போய் ஒளிந்து கிடக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டு மக்களுடைய இந்தப் புரிதல் இன்றைக்கு வலுவாக இருக்கிறது. வெறும் கூட்டணி பலத்தால் மட்டும் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கருதிவிடக் கூடாது. இந்தக் கருத்தியலும் மக்களிடத்திலே இருக்கிறது.
ஆன்ட்டி பி.ஜே.பி, ஆன்ட்டி ஆர்.எஸ்.எஸ்., அவர்கள் சமூகநீதிக்கு எதிரான கும்பல், சதிக்கும்பல் – இந்தப் புரிதல் இருக்கிறது – இந்தப் புரிதல் உள்ளவர்களின் எண்ணிக்கை இங்கே கணிசமாக இருக்கிறது.
கருத்தியல் ரீதியாக இந்த மண்ணிலே பி.ஜே.பி. எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு ஆழமாக வேரூன்றி இருக்கிறது!
வெறும் உறுதியான வாக்குகள் மட்டும் பெற்றால் வெற்றி பெற முடியாது. தி.மு.க.விற்கு இருக்கின்ற வாக்கு வங்கி மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகள் மட்டும் சேர்ந்தால் வெற்றி பெற்றுவிட முடியாது.
கருத்தியல் ரீதியாக இந்த மண்ணிலே பி.ஜே.பி. எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு அல்லது சங் பரிவார்கள் எதிர்ப்பு என்பது இங்கே ஆழமாக வேரூன்றி இருக்கிறது தோழர்களே, அதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
அதற்கு அடிப்படை பெரியார் இயக்கம்தான், திராவிட இயக்கம்தான், திராவிடர் கழகம்தான் என்பதையும் நான் பெருமையோடு பதிவு செய்யக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அதை நாம் ஓங்கி, உரக்கச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றோம். இன்னும் வலுவாக அதை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்கிறது.
ஓ.பி.சி. சமூகத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் தேவைப்படுகின்றன!
இந்த நிகழ்வின்மூலமாக நான் சொல்ல விரும்புகின்ற செய்தி – அகில இந்திய அளவில் ஓ.பி.சி. சமூகத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் தேவைப்படு கின்றன. அவர்களை ஒருங்கிணைக்கவேண்டிய தேவை இருக்கிறது.
இன்றைக்கு நிதிஷ்குமார் – அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களெல்லாம் முற்போக்குச் சிந்தனையாளர்களின் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். அன்றைக்கு மிசா காலத்தில், அதனைக் கடுமையாக எதிர்த்த போராளிகளின் வழிவந்தவர்கள்.
1976-1977 ஆம் ஆண்டு மிசா கொண்டு வந்தபொழுது, அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு, அகில இந்திய அளவில் மக்கள் ஒருங்கிணைந்தார்கள். லோகியா போன்ற தலைவர்களின் வாரிசுகளாக ஒருங்கிணைந்தார்கள். அப்படி ஒருங்கிணைந்துதான் அந்த ஆதிக்கத்தை எதிர்த்தார்கள்.
ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துவிட்டது; அப்பொழுது ஜனதா என்ற ஓர் அமைப்பு உருவானது. தி.மு.க., தி.க. போன்ற அமைப்புகள் அன்றைக்கு அதிலே மிகப்பெரும் சக்திகளாக இருந்தார்கள்.
இந்த நாட்டைக் காக்கவேண்டும் அகில இந்திய அளவில் என்கிறபொழுது, தமிழ்நாடு எவ்வளவு பெரிய பங்களிப்பு செய்தது என்பதற்கு 1976-1977 காலகட்டம் மிக முக்கியமானது. அது ஒரு பெரிய தாக்கத்தை இந்திய அரசியலில் ஏற்படுத்தியது.
அதன் பிறகு இந்திய அரசியலில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் என்பது மண்டல் பரிந்துரைதான்.
இனி தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல, இந்திய அரசி யலை மண்டலுக்கு முன் – மண்டலுக்குப் பின் என்றே நாம் பகுப்பாய்வு செய்ய கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அந்த அடிப்படையில் அரசியலை நாம் மக்களிடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்.
பி.ஜே.பி. ஒன்றிய அரசை தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆட்சியை டில்லியில் உருவாக்கிவிட முடியும்!
இது வலிமை பெற்றால், 2029 ஆம் ஆண்டு வரையில் நாம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. இன்றைய மைனாரிட்டி பி.ஜே.பி. அரசை தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆட்சியை டில்லியில் உருவாக்கிவிட முடியும். இந்தியா கூட்டணி அதுவரையில் வெற்றிகரமாக இணைந்து பயணிக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
இந்தியா கூட்டணியை உடைக்க மோடி, அமித்ஷா போன்றவர்கள் எதையும் செய்வார்கள்!
அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில்கூட நான் சொன்னேன், ‘‘அந்த அணியிலிருந்து யார் விலகுவார்கள்? யாரை நம் பக்கம் இழுக்கலாம் என்று முயற்சி செய்வதைவிட, நம்முடைய அணியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது முக்கியமானது. இந்தியா கூட்டணியை உடைக்க மோடி, அமித்ஷா போன்றவர்கள் எதையும் செய்வார்கள்” என்றேன்.
ஏனென்றால், அவர்கள் உடைப்பதில் பயிற்சி பெற்றவர்கள். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளில் உள்ளவர்களை சாதாரணமாக எடை போட முடியாது.
எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல், எந்தப் பயனை யும் எதிர்பார்க்காமல், அவர்களின் கொள்கைக்காக, நோக்கத்திற்காக எல்லாவிதமான நியாய தர்மங்களைக் கடந்து செயல்படக் கூடியவர்கள். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களுடைய நோக்கம்தான் முக்கியம், அவர்களுடைய கொள்கைதான் முக்கியம். அதனால், எதையும் மீறுவார்கள் அவர்கள்.
தான்தோன்றித்தனமாக எந்த முடிவையும் எடுப்பார்கள்; எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
நாம் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும்!
மோடி, திடீரென்று குடியரசுத் தலைவர் ஆட்சி முறைதான் வரப் போகிறது என்று அறிவித்தாலும்கூட, யாரும் ஆச்சரி யப்படுவதற்கில்லை.
மைனாரிட்டி அரசை அய்ந்தாண்டுகள் அப்படியே கொண்டு போகவேண்டும் என்பதற்காகப் போராடிக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் நாம் நினைக்க முடியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மோடி முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும்.
நம் முன் இருக்கின்ற மிகப்பெரிய சவால்!
எனவே, நீட்டை ஒழிப்பதாக இருந்தாலும், சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற இந்த அறப்போராட்டத்தில், நாம் சங் பரிவார்களைப் புரிந்துகொள்வதும், சங் பரிவார்களுக்கு எதிரான செயல்திட்டங்களை வரையறுப்பதும்தான் நம் முன் இருக்கின்ற மிகப்பெரிய சவால் என்று சொல்லி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.