புதுடில்லி, ஜூன் 21 பிரதமர் நரேந்திர மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு தொடர்பான காட்சிப் பதிவு வைரலானதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்து, தன்னுடைய ‘எக்ஸ்‘ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதா வது, ”நரேந்திர மோடியின் கார் அணி மீது செருப்புகளை வீசிய நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. மற்றும் அவரது பாதுகாப்பில் கடுமையான குறைபாடும் உள்ளதாகத் தெரிகிறது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான நமது போராட்டம் காந்திய வழியில் (அகிம்சை) தான் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, தனது தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக 19.6.2024 அன்று சென்றிருந்தார். பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயிலில் கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டு வழிபாடு செய்தபின், கோயிலை நோக்கிச் சென்றுள்ளார். பிரதமர் மோடி சாலை வழியே செல்லும்போது அப்பகுதி மக்கள், அவரை வரவேற்று, ஆரவாரம் செய்துகொண்டி ருந்தனர்.
அப்போது, பிரதமர் சென்ற கார் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டுள்ளது. அதனைக் கண்ட பிரதமரின் பாதுகாவலர், அந்த செருப்பினை எடுத்து, தூக்கி எறிந்தார். இந்த நிகழ்வு தொடர்பான காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1.41 நிமிடம் கொண்ட அந்த காட்சிப் பதிவில், ஒருவர் ’செருப்பு வீசப்பட்டது’ என்று சொல்வ தையும் கேட்கலாம்.
ரூபாயின் மதிப்பு பாதாளத்தில்;
மோடியோ யோகா நிகழ்ச்சியில் மும்முரம்!
மும்பை, ஜூன் 21 அரசியல் பதட்டங்கள் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகளுக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 17 பைசா சரிந்து ரூ.83.61 ஆக நிலைபெற்றது.
நேற்று (19.6.2024) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா குறைந்து 83.44 ரூபாயாக இருந்தது. முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியன்று டாலருக்கு எதிரான உள்நாட்டு நாணயம் ரூ.83.61 ஆக முடிவடைந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது விலைவாசிகள் உயரும் அபாயம் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருக்கிறது. இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மோடி யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.