ஆமதாபாத், ஜூன் 6- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகரில் உள்ள கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சில பொட்டலங்கள் கிடந்தன. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடற்கரைக்கு சென்று சோதனையிட்டபோது கேட்பாரற்று கிடந்த அந்த பொட்டலங்களில் கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடற்கரையில் கிடந்த 13 போதைப் பொருள் பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா ஒரு கிலோ போதைப்பொருள் இருந்ததாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.130 கோடி என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.