தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

1 Min Read

சென்னை, ஜூன் 6 பள்ளிகள் திறப்பு, வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10-ஆம் தேதி (திங்கள்) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏற்ப வரும் 9-ஆம் தேதி 705 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதேநேரம், வரும் 8, 9 தேதிகள்வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு-முகூர்த்தம்) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம் பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7, 8 தேதிகளில் 1,105 பேருந்துகள் மற்றும் சென்னை,கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்க ளுக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூரு,திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1,465 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 7,8 தேதிகளில் தலா 15 பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *