சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 332 அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களை கொண்டு வருவதற்காக இணையதள வசதி தயார்நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசின் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில்…
புத்தகங்கள், கரும்பலகைகள் வாயிலாக நடந்து வந்த கற்றல்-கற்பித்தல் நிகழ்வு, உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பாடப்பொருட்களை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் 46 லட்சத்து 12 ஆயி ரத்து 742 மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பத்துடன் பொருத்த மான கற்றல் சூழலை உருவாக்க ரூ.519 கோடியே 73 லட்சம் மதிப்பில் 8 ஆயிரத்து 180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், ரூ.455 கோடியே 32 லட்சம் மதிப்பில் 22 ஆயிரத்து 931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வக செயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் இந்த உயர்தொழில்நுட்ப ஆய்வ கங்கள், திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.
அதிவேக இணைய வசதி
இந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான இணையதள வேகத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்கிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5 ஆயிரத்து 913 பள்ளிகளிலும், 6 ஆயிரத்து 992 நடுநிலைப் பள்ளிகளில் 3 ஆயிரத்து 799 பள்ளிகளிலும், 24 ஆயிரத்து 338 தொடக்கப் பள்ளிகளில் 10 ஆயிரத்து 620 பள்ளிகளிலும் அதிவேகம் கொண்ட இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்து 332 பள்ளிகளில் அதிவேகம் கொண்ட இணைய வசதி தயார் நிலையில் இருக்கிறது. மீதமுள்ள 17 ஆயிரத்து 221 பள்ளிகளுக்கு ஜூன் மாதம் 2ஆவது வாரம் இந்த இணைய வசதியை மேற் கொள்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்பார்கள் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.