கடவுளின் அவதாரத்திற்குத் தேர்தலில் என்ன வேலை ?

viduthalai
4 Min Read

ஏழைத் தாயின் மகன் என்றார். அதிகம் பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் தான் நான் பிறந்தேன் என்றார். தொடர்வண்டி நிலையத்தில் டீ விற்றதாக கூட சொன்னார்.

தேர்தல் பரப்புரையில் எதையெதையோ சொன்னார் – நம்ப முடியவில்லை. தற்போது மீண்டும் ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி அதில் அறிவியலுக்கு புறம்பான ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இதை எப்படி நம்புவது?

நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை. எனக்கான ஆற்றலை கடவுள் கொடுத்ததாக உணர்கிறேன். சில முக்கியமான பணிகளை முடிப்பதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவனாக உணர்கிறேன். என் தாயாரின் மறைவிற்கு பிறகு தான் இதை உணர்ந்தேன். பரமாத்மா என்னை தூதராக அனுப்பியிருக்கிறார்.
நான் கடவுளின் தூதுவன் என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.

இந்திய தேர்தல் சட்டப்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி மதம் கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது அப்படி மத வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றம் என மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்ட விதி 123 (3) சொல்கிறது. வெற்றி பெற்றாலும் அது செல்லாது என்று சட்டம் சொல்கிறது. தெரிந்தும் மதம் , கடவுள் என பேசுகிறார். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.

“பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை கடவுளின் அவதாரம் என்றால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கவில்லை” என்பது தான் அதன் பொருள். அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள டிஜிட்டல் உலகத்தில் இதை எப்படி நாம் நம்புவது? இதனை என்னவென்று சொல்வது?
சோதனைக் குழாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் கூட கருத்தரிப்பு மூலம் தான் பிறக்கிறது. அப்படியானால் பிரதமர் மோடி சொல்வதை நாட்டு மக்கள் எப்படி நம்புவது? நாட்டு மக்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார்?

இவர் அறிவியலையே கேள்விக்குள்ளாக்குகிறார். நாகரீக சமூகத்தில் இது போன்று அதுவும் ஒரு நாட்டின் பிரதமர் பேசுவதுநாகரீகம்அல்ல.
இந்திய அரசமைப்பின் பிரிவு 51A(h) ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒரு அடிப்படை கடமையாக விஞ்ஞான உணர்வு மனிதநேயம் மற்றும் விசாரணை சீர்திருத்த உணர்வை வளர்ப்பது என்று பட்டியலிடுகிறது.

ஒருவர் கடவுள் பக்தராக இருக்கலாம் அதற்காக அவர் எப்படி வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம் அது அவர்கள் தனிப்பட்ட சுதந்திர உரிமை. ஆனால் அறிவியலுக்கு மாறான கருத்துக்களை கூறி தன்னை கடவுளின் அவதாரம் என்று தேர்தலுக்காக மக்களை நம்ப வைத்து மூட பழக்கத்தை , அதுவும் ஒரு நாட்டின் பிரதமர் ஏற்படுத்துவது என்பது சரியானதாக இருக்க முடியாது. அவரது பேச்சை கடவுளின் பக்தர்களும், ஆன்மீகவாதிகளுமே ரசிக்கவில்லை.
மோடியின் பேச்சை உளவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும். என்று பலரும் சொல்கின்ற அளவிற்கு அவரது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன.
இந்த நாட்டிற்காக விருதுகள் வாங்கிய மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளானோம் என்று சொன்னபோது, இந்த பரமாத்மாவின் தூதர் நேரில் காட்சி தந்து ஏன் காப்பாற்றவில்லை ?குற்றம் நடைபெறாமல் ஏன் தடுக்கவில்லை?

மணிப்பூர் கலவரத்தில் ஒரு இளம் பெண் நிர்வாணமாக ஓடிவந்தாள், இரண்டு பெண்களை நடுரோட்டில் நிர்வாணப்படுத்தி வன்புணர்வு செய்து இழுத்து வந்த போது பரமாத்மாவின் தூதர் ஏன் மணிப்பூர் சென்று அவர்களை காப்பாற்றவில்லை? பரமாத்மாவின் தூதர் எங்கே சென்று இருந்தார்? இது போன்று இந்தியாவில் நடந்த மனித உரிமை மீறல்களும், பாலியல் வன்புணர்வு கொடுமைகளும் நடந்த போது எதையும் தடுக்காமல் இப்படி ஒரு பரமாத்மாவின் தூதர் இருக்கிறார் என்றால் அப்படி ஒரு தூதர் இந்த நாட்டிற்கு தேவை இல்லை. அப்படி ஒரு அவதாரமும் வேண்டாம்.   மனித நேயம் உள்ள ஒரு மனிதரைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

கடவுளின் அவதாரத்தை அல்ல. கடவுளின் அவதாரம் என்று சொன்னவர்களையும் அவர்களின் நிலைமையையும் நாம் பார்த்து விட்டோம்.
தற்போது நடந்து வரும் ஆட்சியில் ஒரு பெரிய ஆபத்து உள்ளது. அது என்னவென்றால் இந்த பா.ஜ.க. ஆட்சி தோற்கடிக்கப்படும் போது அமைதியாக ஆட்சியை விட்டு வெளியேற வாய்ப்பு இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தலில் முறைகேடுகளை செய்வதற்கு எல்லா வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள்.

இதற்கு முன்பு நடந்த தேர்தல் போல இந்த தேர்தல் ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு முடிந்து ஜூன் 4 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என நாம் உறுதியாக கூற முடியாது. வாக்கு எண்ணிக்கைக்கான நாள் நெருங்க நெருங்க மிக மோசமான கலவரங்களை எதிர் கொள்ளக்கூடிய நாட்களை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கும். என்று ஒன்றிய நிதி அமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர் கூறி இருப்பதற்கு ஏற்ப மோடி அவர்களும், சில பணிகளை செய்து முடிப்பதற்காக என்னை பரமாத்மா இங்கே அனுப்பி வைத்திருக்கிறார் என்று கூறுவதை பார்த்தால், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.
நான் கடவுளின் அவதாரம் என்னை தேர்தல்கள் கட்டுப்படுத்தாது. இந்தியா கூட்டணியே வெற்றி பெற்றாலும் என்னை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என்று பரமாத்மாவின் தூதராக சொல்லி விடுவாரோ? என அச்சப்பட வேண்டி இருக்கிறது.

ஒரு நாட்டின் பிரதமர் மக்களை சந்தித்து பத்து ஆண்டுகளில் நான் இந்த சாதனைகளை எல்லாம் செய்தேன் என்று சொல்லி வாக்குகளை கேட்க முடியாமல், கடவுள், மதம், என மதவாதத்தை பேசி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகிறார்.
வேத காலத்தில் யானை தலையை வெட்டி மனிதனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக சொன்னவர் தான் இவர்.
கரோனா காலத்தில் மக்கள் அவதிப்பட்டபோது தட்டுகளை வைத்து தட்டுங்கள். டார்ச் லைட் அடியுங்கள் கரோனா ஓடி விடும் என்று சொன்னார். தற்போது பரமாத்மாவின் அவதாரம் என்கிறார்.

இவர் பேசுவதை இந்திய மக்கள் மட்டுமல்ல. உலக நாடுகளும் உற்று கவனித்து வருகின்றன. என்பதை பிரதமர் மோடி அவர்கள் தெரிந்து பேச வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *