தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பிஜேபியிடம் விழிப்பாக இருங்கள்: அகிலேஷ் எச்சரிக்கை

Viduthalai
2 Min Read

லக்னோ. ஜூன்.1- பா.ஜனதா வின் பொய்கள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சமாஜ்வாடி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தி உள்ளார்.
தொண்டர்களுக்கு
அறிவுரை
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று (1.6.2024) நடக்கிறது. இதில் உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகள் உள்பட 57 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைவதை முன்னிட்டு சமாஜ்வாடி தொண்டர்களுக்கு கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

தேர்தலுக்கு பிந்தைய
கருத்துக்கணிப்பு
இன்று நான் உங்களிடம் ஒரு மிக முக்கியமான வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாளை (1.6.2024) வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான் றிதழைப் பெறும் வரையிலும் நீங்கள் அனைவரும் முழு விழிப்புடனும், கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். பாரதிய ஜன தாவின் தவறான வழிநடத்தலுக்கு ஆளாகாதீர்கள்.
நாளை (இன்று) மாலை தேர்தல் முடிந்தவுடன், பா.ஜனதா முன்னிலை பெற்றுள்ளது என்று பல்வேறு ஊடகங்களில் சொல்லத் தொடங்குவார்கள். அதாவது பா.ஜனதாவுக்கு சுமார் 300 இடங்கள் வரை கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்படும். இது முற்றிலும் தவறானது.

வாக்கு எண்ணிக்கை
சீர்குலைப்பு
இந்தியா கூட்டணி 2-3 நாட்களில் ஆட்சியமைக்கப்போகும் நிலையில், பா.ஜனதா இப்படி பொய் சொல்லி என்ன நன்மை பெறும்? என நீங்கள் நினைக்கலாம்.
அதற்கான பதிலை நான் கூறுகிறேன். பா.ஜனதாவினர் இப்படி பொய் சொல்லி உங்கள் அனைவரையும் சோர்வடையச் செய்ய விரும்புகிறார்கள். இதனால் உங்கள் உற்சாகம் குறைந்து, வாக்கு எண்ணும் நாளில் நீங்கள் விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கமாட்டீர்கள். இதை பயன்படுத்தி சில ஊழல் அதிகாரிகளுடன் இணைந்து பா.ஜனதாவினர் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கக்கூடும்.

நம்பிக்கையுடன்
இருங்கள்
நீதிமன்றத்தால் பொருத்தப்பட்ட கேமராக்களுக்கு முன்னால் நடந்த சண்டிகார் மேயர் தேர்தலிலேயே தில்லுமுல்லு செய்யக்கூடிய துணிச்சல் உள்ள பா.ஜனதாவினர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எந்த வகை யான மோசடியையும் செய்யலாம் என் பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் இந்த எச்சரிக்கை அவசியம். அதனால்தான், பா.ஜனதாவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தாக்கத்துக்கு ஆளாகாமல். முழு விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். உங்கள் நம்பிக்கையை தக்க வைத்திருங்கள், உறுதியாக இருங்கள்.
‘வாக்களிப்பது, எச்சரிக்கை யுடன் இருப்பது’ என்ற வெற்றிக்கான அடிப்படை மந்திரத்தை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்னரே அரசமைப்பு, ஜனநாயகம் மற்றும் நாட்டு மக்களின் வெற்றியைக் கொண்டாடுங்கள்.
-இவ்வாறு அகிலேஷ்யாதவ் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *