ஆதிதிராவிடர் – பழங்குடியின மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

viduthalai
2 Min Read

‘என் கல்லூரிக் கனவு’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடைபெறுகிறது

சென்னை, மே 14- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இன்றுமுதல் வரும் 21ஆம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற 91.03 சதவீத மாணவ – மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2 ஆண்டு பொதுத்தேர்வு தேர்ச்சியை விட அதிகம். பழங்குடியினர் நலப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் (95.15) தமிழ்நாட்டின் சராசரி தேர்ச்சி விகிதமான 94.56 சதவீதத்தைவிட அதிகமாகும்.
இத்துறையின் கீழ் செயல்படும் 26 ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள், 14 பழங்குடியினர் நலப் பள்ளி மாண வர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும், ‘என் கல்லூரிக் கனவு’ என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்ட மிடப்பட்டு, முதல் கட்டமாக. 38 மாவட்டங்களைச் சேர்ந்த 13,800 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். இந்நிலையில், 2ஆம் கட்டமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிஇன்று முதல் மே 21ஆம் தேதி வரைமாவட்ட வாரியாக நடைபெறுகிறது.

அதன்படி, மே 14ஆம் தேதி சென்னை, நாகப்பட்டினம், பெரம்பலூர், மயிலாடுதுறை, 15ஆம் தேதி தருமபுரி, திண்டுக்கல், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர், 16ஆம் தேதி ஈரோடு, அரியலூர், தென்காசி, திருப்பூர், தஞ்சாவூர், 17-ஆம் தேதி காஞ்சிபுரம், மதுரை, விழுப்புரம், நீலகிரி, சேலம், 18-ஆம் தேதி தூத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, 20-ஆம்தேதி கரூர், திருப்பத்தூர், விருதுநகர், திருவாரூர், வேலூர், ராமநாதபுரம், தேனி மற்றும் 21ஆம் தேதி ராணிப்பேட்டை, சிவகங்கை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெறுகிறது.

உயர்கல்வி குறித்த மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு இத்துறையின் சார்பில் பல்வேறு துறை நிபுணர்களைக் கொண்ட டெலிகிராம் அலைவரி (https://t.me/ qbZngA9zNH82YTdl)உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களையும் மாணவர்கள் தீர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *