சென்னை, மே 6 தமிழ்நாடு மின்வாரியத் துக்கு 5,120 மெகாவாட் திறனில் 6 அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், அய்.பி.வேலி சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய இந்தாண்டு தொடக்கத்தில் ஏலம்விட்டது.
ஒடிசா மாநிலத்தில் 21 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கத்தை பெறுவதற்கான ஏலத்தில் தமிழ்நாடுமின்வாரியம் பங்கேற்றது. வேறு நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “ஒரு சுரங்கத்துக்கு முதல் முறை ஏலம்விடும்போது ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றால், அந்நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படாது. மறுபடியும் ஏலம் விடப்படும். 2-ஆவது முறை ஏலம்விடும்போதும் அதே நிறுவனம் மட்டும் பங்கேற்றால் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, சகிகோபால் சுரங்க ஏலத்தில் முதல் மற்றும் 2-ஆம் முறை ஏலத்தில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்றது. எனவே, அந்த சுரங்கம் தமிழகத்துக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.