86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு

Viduthalai
2 Min Read

அபுதாபி, மே 4- பூமியில் இருந்து சுமார் 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:-
அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர்கள் ஜாஸ்மினா பிலெசிக், பேராசிரியர் இயன் டாப்ஸ் டிக்சன் மற்றும் குழுவினர் இணைந்து நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்து வந்தனர். இதில் பூமியில் இருந்து சுமார் 86 ஒளி ஆண்டுகள் (ஒளி 1 ஆண்டில் பயணம் செய்யும் தூரம்) தொலைவில் உள்ள டபள்யூ.ஏ.எஸ்.பி- 43பி என்ற புதிய கோள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கோள் சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோளைப் போன்று அதே நிறையுடையதாக உள்ளது. இந்த கோள் சூரியன் போல் ஒரு விண்மீனைச் சுற்றி வருகிறது. மிக நெருக்கமாக அந்த விண்மீனைச் சுற்றி வருவதால் அந்த கோளுக்கு ஒரு ஆண்டு என்பது 19லு மணி நேரம் மட்டுமே ஆகும். பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. நெருக்க மாக அந்த கோள் தனது விண்மீனைச் சுற்றி வரும்போது அதன் சுழற்சியானது அதன் சுற்றுப்பாதையுடன் இணைந்து செல்கிறது. அதாவது நமது பூமியை நிலவு சுற்றி வருவதுபோல அந்த கோள் தனது விண்மீனைச் சுற்றி வருகிறது. இதன் காரணமாக கோளின் ஒரு பாதி நிரந்தரமாக ஒளிரும் (பகலாகவே இருக்கும்). மற்றொரு பாதி நிரந்தரமாக இருள் சூழ்ந்ததாகவும், மிகவும் குளிர்ந்த நிலையிலும் உள்ளது.

இந்த கோளில் அடர்த்தியான மேகங்கள் காணப்படு கிறது. மேலும் அதன் இருள் சூழ்ந்த பகுதியின் ஆச்சர்ய படத்தக்க வகையில் வளிமண்டலத்தில் மீத்தேன் கிடையாது. அதற்கு பதிலாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பூமியில் உள்ள மேகங்களை விட அதிக உயரத்தில் இந்த கோளில் மேகங்கள் காணப்படுகிறது. இந்த டபள்யூ.ஏ.எஸ்.பி- 43பி கோளின் நிரந்தரமாக ஒளிரும் பகுதியின் வெப்பநிலை 1,250 டிகிரி செல்சியசாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *