தமிழ்நாட்டில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணியும் ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையும்

viduthalai
3 Min Read

சென்னையில் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை – சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உயர்மட்டப் பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் ரூ.61,843 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்துக்கு மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் ஒப்பிடும்போது இதுவரை வெறும் 5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது ஒன்றிய பிஜேபி அரசு. இது திட்டமதிப்பில் வெறும் 5% மட்டுமே! இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது குறித்து ஆர்.டி.அய். மூலம் தகவல் பெறப்பட்டது. அதன்படி, 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 17ஆம் தேதி பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கான முன்மொழிவு அமைச்சரவை யின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருந்தது.

இதனிடையே மெட்ரோ ரயில் திட்டம் மாநில, ஒன்றிய 50 : 50 நிதிப் பங்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் திட்டப் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், இந்த திட்டத்தை, ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் மாநில நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு செலவினங்களை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகரின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருக்கிறது. திட்டப்பணிகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு மொத்தம் 7 முறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. திட்ட மதிப்பில் 15 விழுக்காட்டை பங்கு முதலீடாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வரும் நிலையில், 10% தொகையை மட்டுமே மானியமாக வழங்குவதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. இந்தச் சிக்கலில் கருத்தொற்றுமை ஏற்படாததும் இந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிப்பது தாமதமாவதற்கு ஓர் காரணமாகும்.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முக்கியத்துவம் கருதி 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.10,000 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் முறையே ரூ.3100 கோடி, ரூ.2681 கோடி என மொத்தம் ரூ.15,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும் மாநிலஅரசின் நிதியில் இருந்து செலவிடப்பட்டு வருகிறது. முழுமையான நிதி கிடைக்காத பட்சத்தில், திட்டமிட்ட காலத்திற்குள் இப்பணியை முடிப்பது என்பது அசாதாரணமானது. 50 விழுக்காடு நிதியை ஒதுக்க வேண்டிய ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்கிற காரணத்தால் வழக்கம் போலவே அலட்சியம் காட்டுகிறது.
இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் அனேகமாகப் பாடம் கற்பித்து விட்டனர் என்பதில் அய்யமில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *