கடைசி வாய்ப்பு – தேசத்தை மீட்க!

Viduthalai
3 Min Read

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும், அய்ந்து ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடுகள் பட்டியலில் சேர்ப்பேன். வேலை இல்லாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் கூறி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி.
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தனி மனித விளம்பரம் செய்து கொண்டு, ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவாகொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் மோடி. இனி “ஆச்சே தின்” – எல் லோருக்கும் நல்ல நாள் என்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 75 ஆண்டு கால வரலாற்றில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தனி மனிதனின் வருவாய் குறைந்து போனது.

அய்ந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய நாட்டை மதவெறி, பாசிசம், சர்வாதிகாரம் என்ற பேராபத்து சூழ்ந்துள்ளது.
இந்த நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து மதவெறியர்களால் உண்டாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கூட்டணி. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் எந்த எல்லைக்கும் சென்று ஜனநாயக முறையை வீழ்த்துவார்கள். இந்த நாடு மதம் சார்ந்ததாக இருக்க வேண்டும், இந்த நாட்டிற்கு இந்துராஷ்டிரம் என பெயர் சூட்ட வேண்டும் என்பதே அவர்களின் இறுதி இலக்கு என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு வகையிலான தேசிய இனம், பல்வேறு வகையான பண்பாடு நிறைந்து காணப்படும் இந்த தேசத்தில் மதச்சார்பற்ற அரசு தான் இருக்க வேண்டும். அதன் பெயர் தான் மதச்சார்பின்மை. மக்கள் மதம் சார்ந்தவராக இருக்கலாம். ஆனால், எப்போதும் எந்த ஒரு அரசும், எந்த ஒரு மதத்தையும் சார்ந்ததாக இருக்கக் கூடாது. மதச்சார்பற்ற நாடாக இருந்தால் தான் நீதி நிலைநாட்டப்படும். ஆர்.எஸ்.எஸ். வலிமை பெற்றால் ஸநாதனமும் கூடவே வலிமை பெறும். நாட்டில் சமூகநீதி குழி தோண்டிப் புதைக்கப்படும். பா.ஜ.க.வை வெறும் அரசியல் கட்சியாக மட்டுமே பார்க்கக் கூடாது. ஏனென்றால் பாரதிய ஜனதா சராசரியான அரசியல் இயக்கம் இல்லை, ஆர்.எஸ். எஸ். அமைப்பின் அரசியல் இயக்கம் தான் பா.ஜ.க.
இன்றைக்கு மொழிவழி தேசியம் எல்லா மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது, ஆனால், பா.ஜ.க. வளர்த்தெடுக்க முயல்வது மதவழி தேசியம். இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை அவர்களின் ஓட்டு அரசியல் வேட்கைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது பா.ஜ.க.

பாரதிய ஜனதாவை எதிர்க்க வேண்டிய பொறுப்பு திராவிட இயக்கத்திற்கும் .காங்கிரசுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று இல்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும். இதுதான் நாட்டிற்கு நல்லது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க.விற்கும் நடக்கும் தேர்தலாக மட்டும் நாம் சுருக்கிப் பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த தேசத்தைக் காப்பதற்கு பா.ஜ.க.வுக்கு எதிராக நடக்கும் இயக்கமாகவே பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றியே ஆக வேண்டும் என முயன்று வருகின்றனர். இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தற்போதைய தேர்தல் யுக்தி. காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டவர்கள் வலிமை பெற புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து அந்த இடத்தில் பிறவி பேதத்தை, பெண் அடிமையை மனித குலத்திற்கு விரோதமான அநீதியை நிலை நாட்டிடத் துடிக்கும், மனுஷ்மிருதியை நிறுவத் துடித்துக் கொண்டுள்ளது வெறியர்கள் கூட்டம். இந்திய நாட்டை காக்கவும், பத்தாண்டு களாக மத வெறியாளர்கள் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய ஜனநாயகத்தை மீட்கவும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தான் கடைசி வாய்ப்பு. கொள்கைக் களத்தில் இருந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்க்கும் திராவிட இயக்கத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.
( தமிழ் கா.அமுதரசன் எழுதியுள்ள “படுகுழியில் ஜனநாயகம்” நூலிலிருந்து பக்கம் 94-95 )

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *