சென்னை,பிப்.13- மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆளுநர் உரையுடன் கூடும் 2024இன் முதல் கூட்டத் தொடரில் மாநில அரசின் கொள்கை குறிப்பை படிக்க மறுத்து, அரசியல் உள் நோக்கத்துடன் வெளிநடப்பு செய்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநர் உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்துகளின் தொகுப்பு அல்ல. அவரின் சொந்தக் கருத்துகளை கூற சட்டப்பேரவை இடமும் அல்ல. ஆளுநர் ஆர்.என். ரவி, தேசியகீதத்தை முதலில் பாட வேண்டுமென்று ஏற்கெனவே கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு தீர்வு இல்லை என்றும், உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து களுடன் முரண்படுகிறேன் என்றும் கூறி கேரள ஆளுநர் பாணியில் 2 நிமிடங்களில் உரையைமுடித்துக் கொண்டார்.
இந்நிலையில் பேரவைத் தலைவர், ஆளுநர் உரையை தமிழில் முழுவதும் வாசித்து நிறைவு செய்து விட்டு, தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ரவிக்கு ஏற்கனவே கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கும் போது, ஆளுநர் ரவி கிஞ்சிற்றும் நாகரிகம் இல்லாமல், கடந்த ஆண்டைப் போலவே, தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறிச் சென்றது அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும். இதன் மூலம் தமிழ்நாடு சட்ட மன்றத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் ஆளுநர் அவமதித் துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. தேசிய கீதத்தை ஆளுநர் அவமரியாதை செய்தார் என்பதும் தெளிவாக வெளிப்பட்டது.
தமிழ்நாட்டின் மாண்பையும், சட்டமன்றத்தின் மரபையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழு உரையும் அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்று உடனடியாக அவை முன்னவர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாக அமைந்தது.
அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர், ஆர்.எஸ்.எஸ்.சின் தொண்டராக செயல் படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாடு விரோதப் போக்கிற்கும் எதிராக தமிழ்நாட்டு மக்களும், ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்பிட வேண்டு மென சிபிஅய் (எம்) வலியுறுத்துகிறது.
– இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறுக!

Leave a Comment