1991 சட்டம் என்ன சொல்கிறது?

viduthalai
3 Min Read

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகேயுள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் பாதாள அறையில் உள்ள வியாஸ் மண்டபத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம், “மதுராவில் உள்ள கேசவ்தேவ் (கிருஷ்ணர்) கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஷாயி ஈத்கா மசூதியை கட்டினார்” என பதில் அளித்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்த சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் பேசியதாவது: “நாங்கள் வாக்குறுதி அளித்தபடி அயோத்தியில் ராமர் கோயில்கட்டப்பட்டுவிட்டது. அங்கு பகவான்ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.”
“மகாபாரத காலத்தில், கவுரவர்களிடமிருந்து ராஜ்ஜியத்தில் பாதியை பாண்டவர்களுக்கு அளிக்க வேண்டும். இதுசிரமம் என்றால் 5 கிராமங்களையாவது கொடுக்க வேண்டும்’’ என கிருஷ்ணர் கேட்டார். ஆனால் ஊசி அளவுக்குக்கூட நிலம் தர மாட்டேன் என துரியோதனன் கூறினார். பிடிவாதத்தின் விளைவு, மகாபாரதப் போர் ஏற்பட்டு, கவுரவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர் .
கிருஷ்ணர் 5 கிராமங்களை கேட்டார். ஆனால் ஹிந்துக்கள் தங்களின் 3 கடவுள்களின் நம்பிக்கைதொடர்புடைய 3 மய்யங்களுக்குத்தான் உரிமை கோரினர். இந்த இடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இது கடவுள்கள் அவதரித்த இடங்கள். துரியோதனன் காட்டியபிடிவாதம் இங்கேயும் காணப்படுகிறது.
இது அரசியல் கலந்த பிடிவாதம். இதை ஓட்டு வங்கியாக்கும் அரசியல் முயற்சி நடக்கிறது. பொதுவான நம்பிக்கை அவமதிக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அயோத்திக்காக பல நூற்றாண்டுகளாக காத்திருந்த காலம் தற்போது முடிந்து விட்டது. சமாஜ்வாதி போன்ற கட்சிகள் ராமன் கோயிலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் அயோத்தியின் அநீதிக்கு காரணம். அங்கு மக்கள் கடந்த 22-ஆம் தேதி கொண்டாட்டத்தை பார்த்தனர்.” இவ்வாறு சாமியார் ஆதித்யநாத் பேசினார்.
ஞானவாபி மசூதியை இடித்துவிட்டு சிவன் கோவிலை விரிவாக்கும் புளூபிரிண்டை விசுவ ஹிந்து பரிஷத் விரைவில் உத்தரப்பிரதேச அரசிடம் கொடுக்கப் போவதாக கூறியுள்ளது. இதன் படி விரைவில் ஞாணவாபி மசூதியும் பாபரி மசூதியைப் போல் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளதையே சாமியார் முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். இந்த நிலையில் மதுராவிலும் கைவைப்போம் என்கிறார். ஏற்கெனவே தாஜ்மகாலை தேஜோமகாலய(சிவன் கோவில்) என்கின்றனர். எனவே அதையும் விடமாட்டார்கள்.
வருங்காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, சுதந்திரத்தின்போது இருந்த வழிபாட்டுத் தலம், மதத் தன்மையைக் கொண்டிருக்கும் என்றும், அதை மாற்ற முடியாது என்றும் கூறுகிறது.
அந்தச் சட்டம், “வழிபாட்டுத் தலங்களை மாற்றுவது தொடர்பான சச்சரவுகளைத் தடுப்பதற்கும், ‘சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கும்’ நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரத்தின்போது இருந்த ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்ற எந்த வழக்கையும் தாக்கல் செய்ய முடியாது என்று அச்சட்டம் கூறுகிறது.
எனவே, சுதந்திரத்தின் போது, ஞானவாபி மஸ்ஜித் ஒரு மசூதியாக இருந்தது. அதன் மதத் தன்மையை மாற்ற முடியாது என்று மசூதி கமிட்டி வாதிடுகிறது.
ஆனால், இதற்கு ஹிந்து தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போதைய காலத்தில் மதத்தின் தன்மை என்ன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
“ஒரு முறை கோவில் கட்டப்பட்டால், அது எப்போதும் கோவிலாகவே இருக்கும்” என ஹிந்து தரப்பினர் வாதிட்டனர்.
1991இல் இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது, ‘வரலாற் றையும் அதன் தவறுகளையும், நிகழ்காலத்தையும் எதிர்காலத் தையும் அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட மாட்டாது’ என்று நாடாளுமன்றம் தெளிவான வார்த்தைகளில் கூறியிருந்தது.
1947 ஆகஸ்டு 15 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலை நீடிக்க வேண்டும் – அதில் மாற்றம் கூடாது என்று 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்க, இப்பொழுது, பாபர் மசூதி இடிக்கப்பட்டு, ராமன் கோயில் கட்டப்பட்டதும், அடுத்து வாரணாசி மசூதியை இடித்து சிவன் கோயில் கட்டப்பட்ட இருப்பதாகக் கூறுவதும் எல்லாம் சட்ட மீறலும், அடாவடித்தனமும், ஒழுக்க மீறலும் அல்லவா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *