பித்தாபுரம் மஹாராஜா சமூகம்

viduthalai
2 Min Read

ராஜாதி ராஜனே! ராஜமார்த்தாண்டனே! ஏதோ இந்த கஷ்ட காலத்திலே, நீர் அரசியல் நடத்த முன் வந்தது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. ஏதோ தங்களுடைய தயவினாலே, பத்துப் பேருக்கு அரசியலில் புதிய லேபிள், அரசியல் பிழைப்பு ஏற்பட வழி உண்டாகும் போலிருக்கிறது. விஷயம் அகப்படாது இருக்கும் பத்திரிகைகளுக்குச் சற்று விநோத ரசமஞ்சரி கிடைக்கும் சந்தர்ப்பத்தை அளித்த தங்களுக்கு, பத்திரிகை உலகின் சார்பாக அனந்தங் கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

ஆனால், மஹாராஜவே கோவிச்சிக்கப்படாது. உமது கட்சிக்குக் கொள்கை என்னவென்று புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியவில்லை. ஆணுமல்ல; பெண்ணுமல்ல. ஆனால், அலியென்றால் கோபங் கொள்வேன் என்று ஒரு பழங்காலத்துப் பேச்சிருக்கிறது. அப்படித் தாங்களாவது, தங்களுக்கு ‘பராக்கு’ கூறும் அன்பர்களாவது, என்மீது கோபித்துக் கொள்ளக்கூடாது. உள்ளபடி, ஒரு புத்தம் புதிதாக கட்சி முளைத்திருக்கிறதே, அது எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். மந்திரி பதவியை வகிக்கப் போகிறோமென்கிறீர்கள்! சரி வெளு வெளென வெளுத்துவிடுங்கள்! எட்டினால் பிடித்துக்கொள் ளுங்கள்.

எட்டாத கனிக்கு ஏணியிட்டும் பாருங்கள். அல்லது கிட்டாதாயின் வெட்டென மற என்ற மூதுரையைக் கவனியுங்கள். அந்த விஷயமாக நீர் கவனித்து நடந்துகொள்ளுங்கள்.
முதலிலே கொள்கை என்னவென்று கூற வேண்டாமா? ஒரு புத்திசாலிக் கிழவியாம். ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தாளாம். அய்யோ பாவம், இரக்கம் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர், ‘‘பாட்டி எந்த ஊர் வண்டிக்குக் கார்த்திண் டிருக்க?’’ என்று கேட்டார். நாம் ஊரின் பெயரை இவனுக்கு ஏன் சொல்வது என்ற எண்ணம் பாட்டிக்கு. ஆகவே, நான் தெற்கே தஞ்சாவூருக்கு என்றாள் பாட்டி. “அதோ வந்துட்டதே தஞ்சாவூர் வண்டி’’ ஸ்டேஷன் மாஸ்டர் கூறி, தஞ்சாவூர் போகும் வண்டி யைக் காட்டினார். அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார். பொக்கை வாய்தான் இருந்தாலும் சிரிப்பு பொங்கிற்று, பாட்டிக்கு. வண்டி நகர்ந்த உடனே, ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து, “அடே பைத் தியக்காரா! நான் உன்னை ஏமாத்திட்டேனே; நான் தஞ்சாவூ ருக்குப் போகலே; பம்பாய் போறேன்’’ என்றாளாம் பாட்டி!
இப்படிக்கு,
பரதன்
– ‘விடுதலை’ – 3.6.1936

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *