புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்

viduthalai
2 Min Read

பாரிஸ் கார்னரை பாரிமுனை என்றார்
பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்
ஜெமினியை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்
லேக் ஏரியாவை வள்ளுவர் கோட்டம் ஆக்கினார்
வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார்
டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார்.
மவுண்ட் ரோட்டை அண்ணா சாலை ஆக்கினார்.
கடற்கரை சாலையில் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரில் – கண்ணகி சிலை ஸ்டாப்பிங் என்கிறார் கண்டக்டர்.
காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார். குமரியிலே அய்யன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து அடையாளப்படுத்தினார்.
தமிழ்நாடு எங்கும் எத்தனை மேம்பாலங்கள்.
எத்தனை சுரங்கப்பாதைகள். எத்தனை சமூக அரங்குகள்
எத்தனை உழவர் சந்தைகள்.
எத்தனை சமத்துவபுரங்கள்.
இதற்கு இடையிலே தான் குறளோவியம் படைக்கிறார்.
பூம்புகார் படைக்கிறார்.தொல்காப்பிய பூங்கா படைக்கிறார்
ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சீமையிலே, பொன்னர் சங்கர், பாயும் புலி பண்டாரக வன்னியன் போன்ற சரித்திர நாவல்கள் ஒரு பக்கம்.
அம்மையப்பன், வெள்ளிக்கிழமை, ஒரே ரத்தம் போன்ற சமூக நாவல்கள் இன்னொரு பக்கம்.
தினந்தோறும் உடன்பிறப்புக்கு கடிதம். நாள் தவறாமல் மேடைப் பேச்சு. திருவிழா – நாளெல்லாம் கவியரங்க ஊற்று.
அமைச்சரவை பணிகள் – தொண்டர் களுக்கு அன்புக் கட்டளைகள்.
கூட்டணி வியூகங்கள். கொள்கை முழக்கங்கள்.
இவற்றின் இடையே 70 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம்.
இத்தனைக்கும் இடையில் எதிர்க் கட்சிகளோடு மல்லுக் கட்டல்.சொந்தக் கட்சிக்காரர்களை அரவணைத்து செல்லுதல்.
நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.
50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அவர் உருவாக்கிவிட்ட அடையாளங்கள் பல.
அவரே இன்று தமிழரின் அடையாளமாக மாறி இருப்பது புரிகிறது
புராணங்களை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. சிலப்பதிகாரத்தை படியுங்கள் என்றார். எந்த நாட்டு மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த நாட்டுக்கு உரிய திருமறையாக மாறிவிடும் தன்மை படைத்த திருக்குறளைப் படியுங்கள் என்றார்.
முச்சங்கம் கடல் கொண்ட தென்னாட்டில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவரின் உயரத்தைப் பாருங்கள் என்றார்.எத்தனை அரசினர் கல்லூரிகள்.
எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள்
எத்தனை பல்கலைக்கழகங்கள்
கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
குடிசை மாற்று வாரியம்
நியாய விலைக் கடைகள்
மனிதத் தன்மையைப் போற்றும் கை ரிக்சா ஒழிப்பு
இடையிலே 20 ஆண்டுகளுக்கு மேலே அ.தி.மு.க ஆண்டது.
இருப்பினும் கூட இத்தனை சாத்தியங்கள் கலைஞரால் முடிந்தது. அதுதான் அவருடைய தனித் தன்மை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *