நடுங்கும் வயது – நடுங்காத கொள்கை! – கவிஞர் கண்ணதாசன்

viduthalai
1 Min Read
ஊன்றிவரும் தடிசற்று நடுங்கக் கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்க மில்லை
தோன்றவரும் வடிவினிலே நடுக்க மில்லை
துவளாத கொள்கையிலே நடுக்க மில்லை
வான்றவழும் வெண்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்ட மில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்
அய்யாவுக் கிணைஅவரே மற்றோர் இல்லை!
நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெலாம் நிமிர்த்தி வைப்பார்
சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச்
சாகடித்த பெருமைஅவர் தடிக்கே உண்டு
நாதியிலார் நாதிபெற நாப் படைத்தார்
நாற்பத்தி அய்ங்கோடி மக்க ளுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறப்பினிலே பெரியாராய்த் தான் பிறந்தார்
ஆக்காத நூலில்லை; ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை; அழுத்த மாக(த்)
தாக்காத பழைமையில்லை; தந்தை நெஞ்சில்
தழைக்காத உவமையில்லை; தமிழ் நிலத்தில்
நீக்காத களையில்லை; நினைத்துச் சொல்லி
நிலைக்காத பொருளில்லை; நீதி கூட(க்)
காக்காத உலகத்தைப் பெரியார் காத்தார்
கருணைமழை மேகத்தைக் காலம் காக்கும்!
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *