மேனாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போனவர். அவரது அன்றாட நிகழ்வைக்கூட திருப்பதியில் மிகவும் முக்கியமான வைஷ்ணவ பார்ப்பனர் ஒருவர் குறித்துக் கொடுத்த நேரத்தில் தான் செய்வார்.
அவர் தனக்கு நிகரான மற்றும் தன்னைவிட உயர் பதவியில் இருக்கும் நபர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் முன்பு அவர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து அதன் பிறகுதான் சந்திக்க நேரம் வழங்குவார். அல்லது அவர்களைச் சந்திக்கச்செல்வார்.
2014ஆம் ஆண்டு முதல்முறையாக தெலங்கானா மாநில முதலமைச்சராக பதவியேற்ற சந்திரசேகர் ராவ் ஆறு ஆண்டுகள் தலைமைச் செயலகம் செல்லாமலேயே தவிர்த்து வந்துள்ளார்.
ஆறாம் நிஜாம் மன்னர் வீர் மஹபூப் அலி கான் பகதூர் என்பவரால் கட்டப்பட்ட மகாலின் ஒரு பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநில தலைமைச் செயலகமும் மற்றொரு பகுதியில் ஆந்திர மாநில தலைமைச் செயலகமும் செயல்பட்டு வந்தன.
அந்த பிரமாண்ட அரண்மனை கட்டப்பட்டதும் நிஜாமின் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த நிஜாம் அலியின் உறவினர் ஒருவர் காத்திருந்தார். ஆனால் வாரிசு பிரச்சினைகாரணமாக மஹபூப் அலி நிஜாமாக, முடிசூட்டிக்கொண்டார் அதனால் அவரரை பதவியில் இருந்து விரட்ட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நினைத்த அவர் நிஜாமிற்கு மிகவும் மோசமான மூடநம்பிக்கைப் பழக்கம் உள்ளதை நினைவில் கொண்டு 1888ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மாலின் முன்பு நிஜாம் நுழையும் போது உடும்புகளையும் பூனைகளையும் குறுக்கும் மறுக்குமாக ஓடவிட்டார். திட்டமிட்டபடி நிஜாமின் ஆலோசகராக இருந்த திவானைக் கையில் போட்டுக் கொண்டு இந்த கட்டடம் ராசியானது இல்லை என்ற வதந்தியை பரப்பிவிட்டார்.
உடனே நிஜாம் அந்த மகாலை மூட உத்தரவிட்டார். சுமார் 60 ஆண்டுகளுக்குமேல் மூடியே இருந்த இந்த கட்டடம் 1940ஆம் அந்த கட்டடத்தின் மற்றொரு பகுதியில் நுழைவாயில் கட்டி அதனை நிஜாமின் நிர்வாக அலுவலகமாக தலைமைச் செயலகமாக மாற்றினார்
இந்திய சுதந்திரத்திற்குப் பின் நிஜாம் ஆட்சி முடிவிற்கு வந்தது. இருப்பினும் ஆந்திராவின் தலைமைச் செயலகமாக மாநிலப் பிரிவினைகளுக்குப் பிறகு அந்தக் கட்டடம் மாற்றப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட கட்டடம் ராசி இல்லாதது என்று ராசியில்லா கட்டிடம் என்ற பேச்சும் பதவி இல்லாமல் ஏக்கத்தில் இறந்து போன நிஜாமின் உறவினரின் ஆன்மாவின் சாபமும் அந்தக் கட்டடத்தில் இருப்பதாகவும், ஆகையால் அந்தக் கட்டடத்தில் எந்த தலைவர்கள் வந்தாலும் அவர்கள் பதவி போகும் என்ற கதைகளும் உலவ ஆரம்பித்தன.
இதையே காரணமாக வைத்துக் கொண்டு தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் முதலமைச்சரான சந்திர சேகரராவ் தலைமைச்செயலகத்திற்கே செல்லாமல் தனது வீட்டின் ஒரு பகுதியில் பிரமாண்டமான கட்டடம் எழுப்பி அதை முகாம் தலைமைச் செயலகமாக பயன்படுத்தி வந்தார்.
இந்த கட்டடத்திற்கான செலவை தனது சொந்த செலவாக காட்டிய ராவ் அதற்காக தனியாரிடம் இருந்து நிதி பங்களிப்பையும் பெற்றார் என்று நாளிதழ்கள் செய்திவெளியிட்டன.
அதன் பிறகு அனைத்து வாஸ்து ஜோதிடம் எல்லாம் பார்த்து புதிதாக தலைமைச் செயலகம் கட்டிய பின் ஆறு ஆண்டுகள் கழித்தே தெலங்கானா மாநிலத்தின் உத்தியோகபூர்வ தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்தார் சந்திரசேகர் ராவ்.
ஆறு என்ற எண் தனக்கு ராசியானது என்று ஏற்றுக்கொண்ட சந்திரசேகர் ராவ் தனது பதவி ஏற்பு நேரம் முதல் அரசு கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை வரை அனைத்தும் ஆறு வரும் வகையிலேயே அமைத்திருந்தார்.
கட்டடத்தில் வாஸ்து தொடங்கி பதவியேற்பு நேரம் வரை அனைத்திலும் ஜோசியம், நியூமராலஜி என முழுநேரமும் மூடநம்பிக்கையில் ஊறிப்போனதால் அவரது நிர்வாகத்திறன் தெலங்கானா மக்களிடையே பெரிதும் எடுபடவில்லை.
முக்கியமாக நடந்துமுடிந்த தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனது கட்சி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் ஜாதகங்களையும் பெற்று அதில் ராசியில்லாத உறுப்பினர்களை பரிகாரம் செய்யக் கூறியதாகவும் பேச்சு எழுந்தது.
ஆனால் இதுதொடர்பாக அவரது கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும் போது, அவர் சிறந்த இறைபக்தர், எல்லாம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதால் அவர் சில விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார். சாலைகளில் செல்லும் போது விதிமுறைகளைப் பின்பற்றிச் செல்வது போன்றுதான் அவரும் விதிமுறைகளை தனது வாழ்வில் கடைப்பிடித்தார். இதை மூடநம்பிக்கை என்று மிகைப்படுத்தி எழுதிவருகின்றனர் என்று கூறினார்