கருநாடகத்தில் ஆளும் கட்சி அமைச்சருக்கு எதிராக பாஜக தொண்டர்களே ஒட்டிய சுவரொட்டிகள்

Viduthalai
1 Min Read
மற்றவை

மாண்டியா, ஜன. 31 – கருநாடக மாநில பாஜக அமைச்சரை திரும்பிப் போகச் சொல்லி, பாஜக தொண்டர்களே சுவரொட்டி அடித்து ஒட்டியது மாண்டியாவில் நடந்துள்ளது. கருநாடக மாநிலத்தின் வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் ஆர். அசோக்.  இவருக்கு அண்மையில் மாண்டியா மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.  இதையடுத்து அமைச்சர் ஆர். அசோக், ஜனவரி 26 அன்று மாண்டியாவில் குடியரசு நாள் கொண்டாட் டத்தில் கலந்து கொள்வதற்கு வரவிருந்த நிலையில், அவர் மாண்டியாவிற்குள் வரக்கூடாது என்று பாஜக-வினரே நகர் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளனர். 

‘திரும்பி போ அசோக்’ என்றும், “அசோக்கை நிரா கரிப்போம்” என்றும் அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அசோக்கின் வரு கைக்கு எதிராக சமூகவலைதளங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், எதிர்ப்பையும் மீறி, அமைச்சர் அசோக் குடியரசு நாள்  விழாவில் கலந்து கொண்ட நிலையில், அவரை வரவேற்கவும் பெரும் பாலான பாஜக தொண்டர்கள் செல்லவில்லை. இரண்டு முறை மாண்டியாவின் பொறுப்பு அமைச்சராக இருந்த அசோக், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் சமரசத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை பாஜக தொண்டர்கள் முன் வைத்தனர். 

இதையடுத்து அந்தப் பொறுப்பிலிருந்து அசோக் நீக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கே அந்த பதவியை பாஜக மேலிடம் தற்போது வழங்கியதால் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். அதன் விளை வாக, அமைச்சர் அசோக்கிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சிக்கு உள்ளேயே சிக்கல்கள் எழுந்தி ருப்பது, பாஜக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *