மெரினாவில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்

Viduthalai
3 Min Read

அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற பிறகு செயல்படும்: பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப் பணித்துறை பதில்

சென்னை, பிப். 4-  கடலுக்குள் கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டப் பணிகள், தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட துறைகளின் அனுமதிகளைப் பெற்ற பின்னரே தொடங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடலில் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, ‘பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக் கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார்.மேலும், இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 07.08.2018 அன்று மறைந்த முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் புதைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 2021 ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் மெரினாவில் நினைவிடம் அமைப் பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரால் 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.கடந்த 8.11.2021 அன்று, நினைவிடம் அமைப்பதற்காக ரூ.39 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய கூட்டம் 2021.12.09 அன்று நடத்தப்பட்டு, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத் துக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்தப் பட்டது. டிசம்பர் 28ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஜனவரியில் கடற்கரை ஒழுங்கு மண்டலத்தின் அனுமதி கிடைத்து.தொடர்ந்து சிஎம்டிஏ வின் அனுமதியும், கட்டடங்கள் கட்டுவதற்கான சென்னை மாநகராட்சியின் அனுமதியும் வழங்கப் பட்டது. 2022ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேனா நினைவு சின்னத்தைப் பொருத்த வரை, கடற்கரை ஒழுங்கு மண்டலத்தின் அனுமதிக்காக 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் விண்ணப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்தி, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத் துக்கு பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 2022 ஜூன் 20ஆம் தேதி நடத்தப்பட்டது.

பின்னர், இத்திட்டம் தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2022 ஆகஸ்டில் திட்டம் குறித்து வல்லுநர் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பரிந்துரைக்கப் பட்டது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த 2022 டிசம்பர் 29ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிட பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி, கடந்த 2022 டிசம்பர் 31ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்த அறிவிப்பு நாளிதழ் களில் வெளியிடப்பட்டது. 2023 ஜனவரி 31ஆம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் இந்தத் திட்டம் அனைத்துவிதமான அனுமதிகளைப் பெற்ற பின்னரே தொடரப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *