சென்னை, செப்.19 சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குப் பிறகு, பொதுமக்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, குறிப்பிட்ட மற்றும் அனுமதி பெற்ற நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்கத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும், காவல் துறையும் அனுமதி வழங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்: விநாயகர் சிலைகளை உருவாக்கவும், அவற்றை நீர்நிலைகளில் கரைக்கவும் காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் குறிப்பிட்ட நீர்நிலைகளில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் இரசாயன வர்ணங்கள் பூசப்பட்ட சிலைகளைக் கரைக்கக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி தடையை மீறும் இடங்களில் சிலைகளைக் கரைப்பவர்கள் மீதும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
