திருச்சி, செப். 16- “தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதனை சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக விமர்சிப்பதைத் தாண்டி, தனிநபர் ரீதியாக ஒருமையில் விமர்சித்தனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுக நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள இயக்கம். தற்போது ஆர்ப்பாட்ட மேடைகளில் அவர்கள் பேசிய பேச்சு பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அரசின் நிலைப்பாட்டில் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனை முதலமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது என்பது உண்மை தான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதனை சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மின்வெட்டு தொடர்பாக அதிகாரிகள் சொல்லும் தகவல்களை கொண்டுதான் அமைச்சர்கள் பதில் சொல்கின்றனர். அதிகாரிகள் முறையான, சரியான தகவல்களை அமைச்சர்களுக்கு தர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாக்குகளை விலைக்கு வாங்குவது அண்மைக்காலமாக அதிரிகரித்துள்ளது.
வரவுள்ள இடைத்தேர்தலில் அவ்வாறு நடைபெறக் கூடாது. தேர்தல் ஆணையம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தவெக கொடியின் வண்ணத்தில் அரசுப் பேருந்துகளில் வண்ணம் தீட்டுவது என்பது ஏற்புடையது அல்ல. எந்தக் கட்சியும் அரசாங்கத்தில் அந்த வண்ணத்தை பூசக் கூடாது” என்றார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கங்களின் பேரமைப்பு சார்பில்
வைக்கத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை!
பேரமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு !
வைக்கம், செப்.16-– செப்டம்பர் 17 தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் அன்று வைக்கம் தந்தை பெரியார் நினைவிடத்தில் வைக்கம் போராட்ட நினைவு கூரல் மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் வைக்கம் சட்ட மன்ற உறுப்பினர் கே.பினுமோன் (காங்கிரஸ்) பங்கேற்று சிறப்பிக்கிறார்.
2026 செப்டம்பர் 17 தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளன்று, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்களின் பேரமைப்பின் சார்பில் (National Confederation of OBC Employees Welfare Associations), கேரளாவில் வைக்கம் வீதிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கான தடையை எதிர்த்து, அந்த தடையை உடைக்க 1924இல் பெரியார் நடத்திய வீரம் செறிந்த வைக்கம் போராட்டத்தை நினைவு கூரும் விதமாக வைக்கம் வீதிகளில் ஊர்வலமாக நடந்து சென்று, வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் ஒன்று கூடி, தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வைக்கம் சட்ட மன்ற உறுப்பினர் கே.பினுமோன் (காங்கிரஸ்) அவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
பேரமைப்பின் பொதுச்செயலாளர் கு.தனசேகர், தலைவர் சி.சேதுபதி, துணைத் தலைவர் தி.செ. அன்பரசு, செயல் தலைவர் ஆர்.செந்தாமரைக்கண்ணன், பொருளாளர் செல்வம் பெர்னாண்டோ முன்னெடுப்பில், தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறைகளில் செயல்படும் இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் நிர்வாகி கள் பங்கேற்க உள்ளனர்.
