புதுடில்லி, செப். 8- புதுடில்லியில் தனியார் மாணவர் விடுதிக் கட்டடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (6.9.2026) நண்பகலில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 60 மாணவர்கள் தங்கி யிருந்த விடுதி இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மற்ற தனியார் மாணவர் விடுதிகளையும் உடனடியாகக் காலி செய்ய அரசு உத்தரவிட்டது.
இதனால் தங்குவதற்கு வழியின்றி நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் உடமைகளுடன் வீதிக்கு வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டனர்.
ஒன்றிய அரசு, டில்லி மாநில அரசு மற்றும் டில்லி மாநகராட்சி நிர்வாகம் ஆகிய மூன்றும் அதிகாரத்திலும் பா.ஜ.க.வே இருந்தபோதிலும், வீதியில் வேறு வழியின்றி நிற்கும் மாணவர்களுக்கு அடிப்படை உணவு வசதியையோ அல்லது தற்காலிக இருப்பிட வசதியையோ உடனடியாகச் செய்து தர நிர்வாகம் முன்வரவில்லை
மத நல்லிணக்கத்தை
உணர்த்திய மசூதி நிர்வாகம்
உணர்த்திய மசூதி நிர்வாகம்
அரசு மற்றும் பிற அமைப்புகளின் உதவி கிடைக்காத சூழலில், அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்று தங்களது கதவுகளைப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகத் திறந்துவிட்டுள்ளது. தங்குவதற்கு இடமின்றி தவித்த அனைத்து மாணவர்களுக்கும் மசூதி வளாகத்தில் தற்காலிகத் தங்குமிடம் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளும் தாராளமாக வழங்கி உபசரிக்கப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளங்களில் விமர்சனம்
ஆனால், ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்புகள் இக்கட்டான சூழலில் களத்தில் இறங்கி உதவாமல், நட்சத்திர விடுதிகளில் உணவு உண்ணும் புகைப்படங்களைச் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று இணையவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒருபுறம் அரசியல், சமூக பதற்றங்கள் நிலவி வரும் சூழலிலும், ஆபத்தான நேரத்தில் ஜாதி, மத எல்லைகளைக் கடந்து இஸ்லாமிய அமைப்புகளும் மசூதி நிர்வாகமும் மாணவர்களுக்குக் கரம் கொடுத்து உணவு மற்றும் புகலிடம் அளித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
