சென்னை, செப். 05- தமிழ்நாடு அரசின் வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்.12-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கேரளம் மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வைக்கம் விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியாவின் இதர மாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் தனிநபர் அல்லது நிறுவனத்துக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இது, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு, பாராட்டுச்சான்று, தங்க முலாம் பூசிய வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை சுயவிவர குறிப்பு, ஆற்றிய பணிகள், அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றுடன் “செயலர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009” என்ற முகவரிக்கு செப்.12-க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பத்தை அனுப்பலாம். தமிழ்நாடு அரசால் நியமிக்கப்படும் தனிச் சிறப்பான தேர்வுக்குழு, விருதுக்கு தகுதியான நபர் அல்லது நிறுவனத்தை தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
