சென்னை மாநகராட்சி-188 பொது இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்க முடிவு

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 5- சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க முதல் கட்டமாக 188 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. திடக்கழிவுகளை கையாள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மட்கும், மட்காத குப்பைகளை தரம்பிரித்து குப்பை வண்டிகள் மூலம் பெற்று வருகின்றனர்.

இதேபோல, தெருக்களின் முக்கிய பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்தக் குப்பைகள் லாரிகள் மூலம் குப்பை சேகரிப்பு நிலை யங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் திடக்கழிவுகளை சாலையில் கொட்டி வருகின்றனர். குறிப்பாக, தெரு முனைகளிலும், நடைபாதைகளுக்கு அருகிலும், நீர்நிலைகளிலும், மருத்துவமனை அருகேயும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறையவில்லை. எனவே, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் சென்னையில் முதல் கட்டமாக 18 சாலைகளை குப்பைகள் இல்லாத சாலைகளாக மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் எந்தெந்த இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து வந்தனர். அதன்படி 188 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சென்னை மாந கராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 188 இடங்களில் பொது மக்கள் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட இருக்கிறது. அதாவது, தெருமுனைகள், மருத்துவமனை, சந்தைப் பகுதி, குப்பைத் தொட்டி அருகில், பள்ளி, கல்லூரி அருகில் என இந்த இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குப்பை கொட்டும் நபர்கள் யார்? என்று தீவிரமாக கண்காணிக்கப்படும்.

ஒரே நபர் அடிக்கடி குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இரவு நேரங்களில் பணியாற்றும் 3 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் இந்தப் பணியில் இணைந்து செயல்படுவார்கள். அவர்களும் பொதுமக்களுக்கு தங்களின் அறிவுரைகளை வழங்குவார்கள்.

-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *