சீனாவில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு செயல்முறை விளக்க நிகழ்ச்சியின் போது, மனித உருவ ரோபோ ஒன்று அங்கு நின்றிருந்த சிறுவனைத் திடீரென எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டின் உரும்கி தாவரவியல் பூங்காவில் பன்னாட்டு குழந்தைகள் நாளினை முன்னிட்டு தற்காப்புக் கலை மற்றும் ரோபோக்களின் திறன்களை விளக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கோமாளி தலைமுடி விக் அணிவிக்கப்பட்ட மனித உருவ ரோபோ ஒன்று தற்காப்புக் கலைத் தொடர்பான அடவுகளைச் செய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் அதன் செயலில் வேகம் கூடியது. அதன் எதிரியைத் தாக்கும் நினைவுப் பகுதி கட்டுக்கடங்காமல் போகவே தனக்கு எதிரில் நின்று கொண்டிருந்த சிறுவனை எதிராளி என்ற கட்டளையைத் தானாகவே பொருள் கொண்டு அந்த ரோபோ தனது காலைச் சுழற்றி சிறுவனின் வயிற்றுப் பகுதியில் பலமாக உதைத்தது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கலந்துகொள்வார்கள் என்ற நிலையில் ரோபோக்கள் பாகங்களை கார்பன் பைபர் கொண்டு செய்திருந்த காரணத்தால், தாக்குதலுக்கு ஆளான, அந்தச் சிறுவன் பெரிய அளவில் காயங்கள் எதுவுமின்றி லேசான அதிர்ச்சியுடன் தப்பினான்.
ரோபோவின் சென்சார்கள் தற்காப்புக் கலை அசைவுகளைச் செய்யும்படி புரோகிராம் செய்யப்பட்டிருந்த நிலையில், சிறுவன் எதிர்பாராத விதமாக ரோபோவின் சென்சார் எல்லைக்குள் அந்தச்சிறுவன் வந்ததால் அவனை எதிராளி என்று நினைத்துத் தாக்கி விட்டது.
இந்த நிகழ்வு குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியதை அடுத்து, மனித உருவ ரோபோக்களின் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவது குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
சான்று: TUA Nouvelles.
