உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிகாட்டி நூல் (2)

இணையவழி கையெழுத்து இயக்கம்

முக்கியத் திருத்தம்

நேற்றைய ‘விடுதலை’யில் (2.9.2026) ‘வாழ்வியல் சிந்தனைகளில்’  ‘கே.எஸ். ஆனந்தராஜா’வாக ‘வாழ்வில்   வெற்றி பெற்ற அய்யா  திருப்பதி ராஜா’ என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.

(ஆ–ர்)

 

 

தன்னம்பிக்கை மிக்க மாமனிதராக அவர் மாத்திரம் அல்ல; அவரது அங்கமான அவரது துணைவியார் அம்மா திருமதி முத்துலட்சுமி இராஜா அவர்களும், ஒரு மனதாகிய வாழ்விணையர்கள். அவர்களின் வாழ்வில் எவ்வளவோ தொடர் தோல்விகள் – பலப்பல முயற்சிகள், ஏற்பாடுகள்! விவசாயம், வியாபாரம் என்ற பல பரிசோதனைகள்!

நம்பிக்கையுடன் இறங்கியும், எதிர்பார்த்தபடி எதுவும் அமையாமல், இருந்த பொருளையெல்லாம் இறுதியில் இழக்கும்  அளவுக்குச்   சென்று  –கழுத்தில் அணிந்திருந்த காசுமாலையேக்கூடப் பட்ட கடனுக்கு ஈடாக்கப்பட்டநிலையில் அவரது இணையரான அந்த அம்மையார் தன் கணவரின் செயலுக்கு வருந்திடவில்லை; சபித்துச் சங்கடப்படும் சாதாரண சராசரி மனப்பாங்கைக் காட்டிடவில்லை. மாறாக, தனது கணவரின் விடா முயற்சிக்குத் தளராத் தன்னம்பிக்கைக் கொடுத்து நிரந்தரத்  துணையாக இறுதி மூச்சுவரை இருந்துள்ளதைப் படிக்கும்போது இவர்கள் வாழ்விலும், தாழ்விலும், ‘மலைகுலைந்தாலும் மனங் குலையாத’ மாண்புக்குரிய மகத்தான வாழ்வியல் வழிகாட்டிகள்  என்பதைப்   புத்தகத்தைப் படிக்கும் எவரும் புத்தி பெற வைப்பதாக இருக்கிறது!

நூலின் முக்கியப் பாடம் சோம்பலை விரட்டியடித்து நம்பிக்கை இழக்காத நாணயம்  ….

நேர்மையுடன், எவர் உதவி செய்தாலும் அவரை செய்நன்றி குன்றாது, நினைவில் வைத்து, மறக்காமல் அவர்களிடம் நன்றிகாட்டத் தவறாத நற்பண்பு –  அவை மட்டுமின்றி, தனது பணித் தோழர்களின் உதவியை; உழைப்பை, துளியளவு சிறப்பானது என்றாலும், மலையளவு போன்றதாக அவர்களை ஊக்கப்படுத்தி ‘விசுவாச நிதி’யை வைப்பு நிதி போல் பெருக்கிடும் – வாழ்க்கையில் மற்றவர்கள் கற்றுக் கொண்டு உயர முற்பட வைக்கும் அரியவிஷயங்கள். அய்யா இறுதி இலக்கை அடைந்த,   ஒப்பிலா உத்தம தொழில் வல்லுநராக உயர்ந்த, என்றும் மறக்க இயலாத ‘ஆனந்த ராஜா’வாகத் தொழில் முயற்சியாளர்களுக்குக் கற்றுத் தரும் கல்வி வள்ளலாக அவரது, தடங்கல்களும், தோல்விகளும் நிறைந்த முட்பாதையில் – கைப்புண்களை விட, அவர் பெற்ற மனப் புண்களைப்பற்றி படிக்கும்போது நம்மையறியாமலேயே கண்கள் பனிக்கச் செய்கின்றன!

புத்தகம் முழுவதும் புத்தாக்கத்திற்கு முந்தையதாகக் கடந்த கரடுமுரடான சரிவுகளும், ஏமாற்றங்களும்பற்றிப் பலப்பல… செய்திகள்!

பெற்றோர்களின் குடும்ப வறுமை, நிதி வாய்ப்பின்மைப் அனுபவக் குறைவு காரணமாக, பள்ளியில் படிக்கும் மாணவப் பருவத்தில் பெற்றோர்களும், தனது வகுப்பில் உள்ள சகமாணவர்களின் கேலி, கிண்டல்களையே பெரிதாக எண்ணி,   முழுவதும் வளராப் பருவம் என்பதால், குடும்ப நிலை புரியாமல், தற்கொலை வரைத் தோல்வியின் விளம்பிற்கு அவரை வேதனைகள் விரட்டிச் சென்ற நிலையிலிருந்து தேறினார்; மாறினார் அய்யா திருப்பதிராஜா என்ற திண்மையாளர்!

நூலில், ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வு:  ‘பெங்களூருக்கு குடிபெயர்ந்த குடும்பம்’’ என்ற தலைப்பில் உள்ள பகுதியில் சொல்லப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு இதோ!

படியுங்கள்! ஒரு சாதாரண நிகழ்வுதான் – ஆனால் அது ஏற்படுத்திய விளைவு  –  திருப்பம் இன்றைய வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு அடிப்படைக் காரணமான விவரங்களாகும்.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,  பயன் தந்ததால் தான் அடையாறு ஆலமரம் போன்ற ‘‘அடையாறு ஆனந்தபவன்’’ வளர்ந்தோங்கி வருகிறது!

அது நூலில் ஒரு சிறு குறிப்பு மட்டும்தான்.

அப்பகுதி இதோ:

‘‘குழந்தைகளை பெங்களூரிலிருந்த பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார் ராஜா. அங்கும் ஃபீஸ்கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. வெகு சிரமப் பட்டு கடனை உடனை வாங்கிதான் சமாளித்தார் ராஜா. பெங்களூருக்கு வந்த பின்பும் தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்தி இருந்தார். ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ் கடையின் பில்டிங் சொந்தக்காரர் விஸ்வநாத், இடது மூன்றாவது கடையான பெங்களூர் ஒயின்ஸ் வெங்கடப்பா, மற்றும் ஜிக்கன்னா மேஸ்திரி கோவிந்த ராஜன் ஆகியோருடன் மிகவும் சிநேகமாகப் பழகி வந்தார்.

ஆத்திர அவசரத்துக்கு கடன் வாங்கிக் கொள்வார்; சொன்ன தேதியில் தவறாமல் கடனைத் திருப்பிக் கொடுத்து விடுவார். ஒரு நாள் சீனிவாசராஜா சோகமாய் அப்பாவின் அருகே வந்து நின்றார்.

என்ன சத்யா? உம்முனு இருக்கே… உனக்கு என்ன வேணும்?

அப்பா! யூனி ஃபார்ம் எல்லாமே கிழிஞ்சு போச்சு, ஒண்ணுகூட உருப்படியா இல்ல… புதுசு வாங்கித் தாங்கப்பா…

சரி நாளைக்கு கண்டிப்பா வாங்கித் தந்துடறேன். சொன்னபடியே மறுநாள் ஜவுளிக்கடைக்கு மகனை அழைத்துச் சென்றார் ராஜா. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு உயர்தரத்தில் துணி எடுத்தார்.

அப்பா… பத்தாதுப்பா… இதையே துவைச்சு துவைச்சுப் போட்டா… சீக்கிரமா நைஞ்சு கிழிஞ்சுடுதுப்பா… அதனால் கூடுதலா ரெண்டு செட் வாங்கிக் குடுங்களேன். செல்லமகன் சத்யா ஆசையாய் ஏக்கத்துடன் கேட்டதும் ராஜாவால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.

சரி! உன் இஷ்டம் சத்யா!

இன்னும் ரெண்டு செட் துணி குழந்தைகளுக்கு தேவைப்படுது… என்று ராஜா கூறியதும்.. கடைக்காரர் உயர்தரத் துணியைக் கிழித்து மடித்து தயாராக வைத்து விட்டார். பில் வந்ததும்  ராஜாவுக்கு திக்கென்றிருந்தது. கையில் சொற்பப் பணமே இருந்தது. இனி என்ன செய்வது? துணியை வேறு கிழித்து வைத்து விட்டார்கள். வேண்டாம் என்று திரும்பக் கொடுத்து விட முடியாதே! இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோமே? ஒரு கணம் யோசித்தார் ராஜா. பசங்களா… நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க… நான் உடனே வந்துடறேன். வேற எங்கேயும் போயிடக்கூடாது. வர்ற வரைக்கும் இந்த இடத்திலேயே இருக்கணும்… சரியா சத்யா? என்று உத்தரவிட்டு விட்டு, சைக்கிளை மிதித்துக் கொண்டு வேக வேகமாய் எங்கோ சென்றார். சிறிது நேரம் கழித்து சோர்வாய் வியர்த்து வழிய வந்த ராஜா, பில்லுக்குரிய பணத்தைக் கட்டி விட்டு குழந்தைகளுடன் ஜவுளிக்கடையை விட்டு வெளியேறினார்.

குழந்தைகளின் மனம் கோணி விடக் கூடாது என்பதற்காக எங்கெங்கோ ராஜா அலைந்து திரிந்து பணத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டு ஜவுளிக்கடைக்கு விரைந்து வந்திருந்தார்.

சீனிவாசராஜாவுக்கு குஷி பிடித்துக் கொண்டது. உயர்தரத்துணியில் மூன்று செட் யூனிஃபார்ம் கிடைத்து விட்டதே? ஆசைப்பட்டதை அப்பா மறுக்காமல் வாங்கி கொடுத்து விட்டாரே? உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அம்மா… பாரும்மா… யூனிஃபார்ம் மூணுசெட்டா அப்பா வாங்கித் குடுத்துட்டாரே? விலை உயர்ந்த துணிம்மா… தொட்டுப் பாரேன் என்றார் சீனிவாசராஜா.

இப்படி ஆளுக்கு மூணு செட் துணி வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்களே? நீங்க ஆசைப்பட்டது கிடைச்சிச்சுன்னு சந்தோஷப் படறீங்களே? இதை உங்களுக்கு வாங்கித் குடுக்கறதுக்கு… அப்பா எவ்ளோ சிரமப் பட்டாருன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? இந்தப் பணத்துக்காக அவரு எங்கேயெல்லாம் அலைஞ்சாரோ? பாவம்டா உங்கப்பா! யாருகிட்டே கடன் வாங்கினாரோ? சத்யா! நீ விவரமான பிள்ளை… பொறுப்பில்லாம நீ இப்படி நடந்துக்கலாமா? ஃபீஸ் கட்ட முடியலைன்னு உனக்குத் தெரியுதுல்ல, உனக்கு பள்ளிப்படிப்பு அவசியமா சத்யா? படிச்சுதான் முன்னுக்கு வரணும்னு அவசியம் இல்லையே? நல்லா கவனம் செலுத்தி வச்சுத் தொழிலைக் கத்துக்கிட்டா, தொழிலில் சாதிச்சு முன்னுக்கு வரலாமே? உன்னால நிச்சயமாக முடியும்னு நம்பு! எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குப்பா… உன் அப்பாவை பார்த்தியா…! சரக்குப்போடும் போது தீக்காயங்கள் பட்டிருக்கு… அவரோட நெஞ்சு, வயிரெல்லாம் காயமாகிக் கிடக்கிறது நீ பார்க்கலையா? பாவம் அப்பா! அடுப்பில் தினமும் வெந்து சாகிறார். கூடமாட இருந்து உதவு… சரக்கு போடறதுக்கு நீ கத்துக்கோ… என்று அறிவுரை கூறினார் முத்துலட்சுமி.

தாயார் கூறியதை ‘வேத வாக்காக’ எடுத்துக் கொண்டார் சீனிவாசா ராஜா, தனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எஸ்.எஸ்.எல்.சி. படிப்போடு நின்று விட்ட சீனிவாசராஜா அப்பாவின் அருகிலிருந்து கூடமாட உதவினார். ஒரே வாரத்தில் சரக்கு போடுவதற்கு கற்றுத் தேர்ந்து விட்டார்.

அந்த நாளில் அடுப்புக்கு கோக் கரி போட்டு எரிப்பார்கள். அதிலிருந்து வரும் கொடிய புகையை சுவாசித்தால்… உடல் நலத்துக்கு கடுமையான தீங்கை விளைவிக்கும். அடுப்பு எரியும் போது, அதிலிருந்து திடீர் திடீரென்று சிறு சிறு அக்னி கண் தெரித்து விழும்… தவறி மிதித்துவிட்டால் ஜிவ்வென்று காலில் பதம் பார்த்துவிடும். காலில் மிதித்தாலே அந்த வேதனையைத் தாளவே முடியாது. நெஞ்சிலும் வயிற்றிலும் தெறித்து விழுந்தால்… எந்த அளவுக்கு வலிக்கும்? என்பதை உணர்ந்தார் சீனிவாசராஜா.

ராஜாவின் சிவந்த உடலில் பட்டிருந்த அநேக தீக்காயங்களைப் பார்த்த போது.. அவரது இதயம் கசிந்தது. அப்பாவின் அருகில் இருந்து… சரக்கு போடக் கற்றுக் கொண்ட சீனிவாசராஜாவுக்கு அப்போது வயது பதினைந்து தான்.. பெரிய மகன் வெங்கடேச ராஜா கடையைப் பார்த்துக் கொண்டார். இவர்கள் இருவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ராஜாவுக்கு சிறிது ஓய்வு கிடைக்கத் தொடங்கியது. நான்காவது கடையில் இருந்த மோகனும், இது புறத்தில் மூன்றாவது கரையிலிருந்த சதீஷும் குடும்ப நண்பர்களைப் போல பழகத் தொடங்கினார்கள். சீனிவாசராஜா அந்த குரூப்பில் சேர்ந்து கொண்டார். நேரம் கிடைக்கும் போது தங்களது கடையில் ஒன்று கூடியும் அல்லது அவர்களது கடைக்குச் சென்றும்… அரட்டை அடித்துப் பொழுது போக்குவார்கள்.’’

நூலைப் படியுங்கள் – பெற்றோரிடம் ‘பக்தி’ பற்றியும், அக்குடும்பத்தின் பக்தி பற்றியும்கூட பற்பல விவரங்களை அறியலாம். இந்நூலில் அவர்களது ‘‘உழைப்பின் வாரா உறுதியாக உளவோ’’ என்ற உறுதிப்பாடும் ஈடுபாடும்தான் எடுத்துக்காட்டானவை.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ உழைப்பு எப்போதும் உயர்த்தும் – என்றும் எவரையும் கைவிடாது!

அடையார் ஆனந்தபவன் ‘ஆனந்தராஜாக்களின்’ அளப்பரிய சாதனை!

அடையார் ஆனந்தபவன் வெற்றி என்ற அறைகூவல் என்பது ஒரு இனிப்பின் வெற்றி மட்டுமல்ல; கசப்பின் களிப்பும்கூட!

இந்நூலுக்கு பிரபல தொழிலதிபர்  பி.ஆர். இராம சுப்ரமணியராஜா (ராம்கோ குரூப்)  தந்துள்ள முன்னுரை அணி செய்வது கூடுதல் சிறப்பு!

(நிறைவு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *