சென்னை, ஆக. 27- பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 7ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (25.8.2026) இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தவெக நிர்வாகி லயோலா மணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. திமுக ஆட்சியின் போது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, தவெக ஆதரவு அளித்திருந்தது.
தூய்மைப் பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தற்போது முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் சூழலில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், ‘அடிமட்டத் தொழிலாளர்களின் கண்ணீருக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்’ என பலரும் சமூக வலைதளங்களில் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போதைய தவெக தலைமையிலான முதலமைச்சர் விஜய் ஆட்சியில், அதே தூய்மைப் பணியாளர்கள் இன்னும் தீவிரமான கோரிக்கைகளுடன் தெருவில் இறங்கிப் போராடும் நிலையில், அன்று குரல் கொடுத்த பலரும் தற்போது களம் காணாமல் மவுனம் காப்பது பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து முறையிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்னும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால் ரிப்பன் மாளிகை அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், ‘‘5 ஆண்டு காலம் ஒப்பந்தம் முறையில் பணியாற்றுபவர்கள், பணி நிரந்தரம் செய்வதாக கடந்த காலங்களில் தவெக தலைவராக இருந்த விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இன்று எங்களை சந்திக்க மறுக்கிறார். அவரை நேரில் சந்தித்து முறையிடும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
