சென்னை, ஆக. 26- தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக ‘டிஎன்-அறிவு’ எனும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (24.8.2026) அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வளர்க்க ‘டிஎன் அறிவு’ எனும் புதிய பாடத்திட்டம் 2027-2028ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
அரசுப் பள்ளிகளில் 2 முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க ரூ.12 கோடியில் ‘திறன் ப்ளஸ்’ விரிவாக்கம் செய்யப்படும். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங் களை உள்ளடக்கிய ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இதுதவிர அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதை ஊக்குவிக்க சிறப்புப் பயிற்சி வழங்கும் ‘வெற்றிப் பாதை’ திட்டம் 172 பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த ரூ.18 கோடியில் மதிச்சுடர் திட்டம், மாணவர்களின் புதுமைச் சிந்தனையை வளர்க்க ‘டிஎன் இக்னைட்’ திட்டம் கொண்டுவரப்படும்.
மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்காக 6,279 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் செயல்படுத்தப்படும். இதன்கீழ் மாதம் ஒருநாள் மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு செல்லலாம்.
மேலும், 50 அரசுப் பள்ளிகள் ‘ஸ்போர்ட்ஸ் ப்ளஸ்’ சிறப்புப் பள்ளிகளாக உருவாக்கப்படும். 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய விளையாட்டு சீருடை வழங்கப்படும்.
சென்னை புத்தகக் காட்சிக்கான அரசு மானியம் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரிய 25 தமிழ் நூல்கள் மறுபதிப்பு செய்யப்படும் என்பன உட்பட 31 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு
புதிய அறிவிப்புகள்
காவியத் தமிழை உலகரங்கில் உயர்த்திப் பிடிக்கும் வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு கூடுதல் நிதியாக ரூ. 5 கோடியே 75 லட்சம் வழங்கப்படும்.
கணினித் திரையிலும் கன்னல் தமிழ் வளர்க்கும் இணையத் தமிழ்ச்சுடர்கள் இருவருக்கு “இணையத் தமிழ்ச்செம்மல்” விருது வழங்கப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு பங்களித்த தமிழறிஞர் பெருமக்கள் கவிஞர் ஜீவபாரதி, பேராசிரியர் ராஜ் கவுதமன், சாரண பாஸ்கரன் என்கிற டி.எம்.எம். அகமது, கந்தசாமி, டி.எம்.பீர் முகமது ஆகிய அய்வர் இயற்றிய அருந்தமிழ் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்.
தீரத்துடன் தமிழ்நாட்டின் எல்லை களைக் காத்த எல்லைக் காவலர்களின் சான்றாண்மையைப் போற்றும் விதமாக எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களின் திறன்களை மெருகேற்றி, அவர்களை தரணியில் தலைசிறந்தவர்களாக உருவாக்கச் சிறப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
அன்னைத் தமிழை அணி செய்யும் விதமாக, தேசிய பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
தேடித் தேடி வாசிக்கும் தலைமுறைக்குத் தெவிட்டாத அறிவு அமுதம் படைக்க, அரிய நூல்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்படும்.
மண்ணின் குரலாய், மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த “நிகழ்த்துக்கலை” குறித்து, ஆழமான ஆய்வுப் புதையல்களை உலகிற்கு வெளிக்கொணரும் பொருட்டு, புதிய அரையாண்டு ஆய்விதழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும்.
