அயோத்தி, ஆக. 21– அயோத்தி ராமன் கோவிலில் நிதி முறைகேடு தொடர்பான புகார்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் தான் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு முதல் முறையாக சிஇஓ நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு மொத்தம் 18 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பூணூல் அணிவீர்களா? குடுமி வளர்ப்பீர்களா? அசைவம் சாப்பிடுவீர்களா? சைவம் சாப்பிடுவீர்களா? மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
நீண்ட கால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையில் நடந்த நிதி முறைகேடு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், வெளிநாட்டுக் கரன்சி கள் என மொத்தம் ரூ.20.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இனி முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சிஇஓ நியமிக்க முடி வெடுக்கப்பட்டது. இந்த பொறுப்புக்கு 5,300 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 18 பேர் இறுதி செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களின் வயது 50 முதல் 70–க்குள் உள்ளது. 18.8.2026 நேர்காணல் தொடங்கியது. ஓய்வு நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணுகாந்த் சதுர்வேதி மற்றும் அறிவியல் ஆய்வாளரும், சீரடி சாய் பாபா அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் சுரேஷ் ஹாவேர் ஆகியோர் நேர்க்காணல் செய்தனர்.
நேர்காணலின் ஒரு பகுதியாக அனைவரும் ‘கூகுள் ஷிட்’ ஒன்றை நிரப்பி வழங்கினர். அதில் மொத்தம் 18 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில் நீங்கள் தீவிரமான இந்துவா?, குடுமி வளர்ப்பீர்களா? பூணூல் அணிவீர்களா? நீங்கள் சைவ உணவு சாப்பிடுவீர்களா? அசைவ உணவு சாப்பிடு வீர்களா? மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளதா? என்று கேள்விகள் கேட்கப்பட்டன.
அயோத்தி ராமன் கோயில் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சிஇஓவாக தேர்வு செய்யப்படுவோருக்கு கெட்டப்பழக்கம் எதுவும் இருக்க கூடாது. இந்து வழக்கத்தை முறையாக பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்பதால் இதுபோன்ற கேள்வி கள் கேட்கப்பட்டுள்ளதாம். இதுதவிர சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப பின்னணி, அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த வகையான பணி செய்கின்றனர். ராமன் கோயிலில் கூட்டம் அதிகரிக்கும்போது அதனை கட்டுப்படுத்துவது எப்படி? கடவுள் ராமன் மீதான நம்பிக்கை எப்படி உள்ளது?, ராமன் கோயிலின் எதிர்கால வளர்ச்சி குறித்த திட்டம் தொடர்பான கேள்விகள் உள்ளிட்டவை கேட்கப்பட்டனவாம்.
