சென்னை, ஆக. 17- “மக்கள் வரிப்பணத்தில் எந்தவிதச் செலவும் இல்லாமல் ‘ரோடு ஷோ’ நடத்தித் தந்ததற்காக இந்த அரசுக்குத் நன்றி” என தன்னை காவல்துறையினர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் சென்றது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை ஆலோசனைக் கூட்டம் நேற்று (16.8.2026) நடைபெற்றது. இதில், உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ் பாரதி, என். ஆர். இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், “மேகதாது விவகாரம், தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு உதயநிதி கைது செய்யப்பட்டது, மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததது உள்ளிட்ட விசயங்களில் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுகவில் 25 அணிகள் இருந்தாலும், சட்டத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் மட்டுமல்ல, தமிழ்நாடே எதிர்பாராத, ஆட்சியில் அமர்ந்திருக்கக்கூடிய அந்த ‘சர்க்கஸ்’ கூட்டமே எதிர்பாராத ஒரு தேர்தல் முடிவு இது.
நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது, சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டால் கைது என்று, ஒரு மோசமானபாசிச அரசாக இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
தூங்கி எழுந்தால் யாரைக் கைது செய்யலாம் என்று திட்டம் போட்டு இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரண்டு வாரத்துக்கு முன்பு என்னையும் கைது செய்ய முயற்சி செய்தது.
‘மிசா’, ‘எமர்ஜென்சி’ இதையெல்லாம் பார்த்த திமுகவினர் இதற்கெல்லாம் நாம் பயப்பட மாட்டோம். எந்தச் செலவுமே இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஒரு ‘ரோடு ஷோ’ நடத்துவதற்கு, இந்த அரசு நமக்கு உதவி இருக்கிறது.
அதற்கு நாம் நன்றியைச் சொல்ல வேண்டும். தட்டுத் தடுமாறி அதிகாரத் துக்கு வந்திருக்கக்கூடிய இந்த புதிய கோஷ்டியில், எல்லாமே ஜோக்கர்தான். யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என யாருக்குமே தெரிய வில்லை.
அவர்கள் எல்லாம் அடைமொழி வைத்துப் பேசினால்தான் மக்களுக்குப் புரிகிறது. மாற்றம், தூய்மை என்று சொல்லி வந்தார்கள். ஆனால், கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஜென் சி இளைஞர்கள் இன்றைக்கு கொள்கை பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அதுதான் இந்த ஆட்சியாளர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வயதில் சிறியவர்கள். அவர்களைக் கைது செய்தால், அவர்களும், அவர்கள் குடும்பமும் பயந்துவிடுவார்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.
எனவே அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை, மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரும் வரை, அத்தனை அணிகளும் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
