தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வீட்டுப் பூட்டை உடைத்து திருடுவது உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களும் இரு சக்கர ஊர்திகள் திருட்டு எனக் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சில சம்பவங்களில் கைது நடவடிக்கைகள் உள்ளது. பல சம்பவங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் தனிப்படை காவலர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். சிசிடிவி பதிவுகள் இருந்தும் பல சம்பவங்களில் திருடர்கள் பிடிபடவில்லை.
அதே போல, கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள மழைமாரியம்மன் கோயில் குடமுழுக்கு செய்ய நாள் குறிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் 12ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவுக்கு மேல் கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெரிய உண்டியலை அப்படியே வெளி தூக்கிச் சென்று அருகில் உள்ள வயலில் போட்டு பூட்டைக் கம்பியால் நெம்பி உடைத்து உண்டியலில் கிடந்த காசு, பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆங்காங்கே சில்லறைக் காசுகள் சிதறிக் கிடந்தன.
இதே போல மழைமாரியம்மன் கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் ஊரின் ஒதுக்குப் புறமாக கல்லணைக் கால்வாய் கரையில் உள்ள விரமாகாளியம்மன் கோயில் கதவில் தொங்கிய பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே இருந்த உண்டியலில் தொங்கிய பூட்டுகளையும் கம்பியால் நெம்பி உடைத்து அதற்குள்ளிருந்த காசு, பணம், பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் போட்ட நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வந்த அவர்கள் கோயில் வாசலில் ஜன்னலில் தொங்கிய சில்வர் குடத்திலான உண்டியலையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஒரே ஊரில் ஒரே இரவில் 2 கோயில்களில் 3 உண்டியல்களை உடைத்து கொள்ளை போன சம்பவம் கிராம மக்களுக்குத் தெரிய வந்து கோயிலில் குவிந்துவிட்டனர். சம்பவம் குறித்த கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே இதே கீரமங்கலம் பகுதியில் நிறைய உண்டியல் திருட்டுகள் நடந்துள்ளது. கொடிக்கரம்பையில் உண்டியலை உடைத்த நபர்கள் இரு சக்கர ஊர்திகள், கைப்பேசிகளை தவறவிட்டுச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
