பகுத்தறிவாளர் கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்களின் பிறந்தநாள் இன்று (11.08.1833)
பகுத்தறிவு உலகத்தின் ஒப்பற்ற பரப்புரையாளர் அமெரிக்க நாட்டின் ‘இல்லியனாய்’ மாநிலத்தில் 1833 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாளில் பிறந்த கர்னல் ராபர்ட் கீரின் இங்கர்சால் பிறந்த நாள்.
அமெரிக்காவின் தலைசிறந்த பகுத்தறிவுவாதியும், வழக்குரைஞருமான இராபர்ட் கிரீன் இங்கர்சால் 19 ஆம் நூற்றாண்டின் “பகுத்தறிவு மேதை” என்று அழைக்கப்பட்டார். மனிதநேயம், மதச் சுதந்திரம் மற்றும் அறிவியல் பார்வையைத் தன் பேச்சுகளால் அமெரிக்காவில் பரப்பியவர்.
இவரின் தந்தை ஜான் இங்கர்சால் ஒரு கிறித்தவ சபை போதகராக இருந்ததால், இவருக்கு ஆரம்பத்தில் கடுமையான மதக் கருத்துகள் அறிமுகமாயின.
இங்கர்சால் இல்லினாய்ஸ் மாகாணம், பியோரியா நகரில் வழக்குரைஞராகப் பொது வாழ்வில் நுழைந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் (1861–1865) சிறப்பாகப் பணியாற்றிய இவர், பின்னர் இல்லினாய்ஸின் முதல் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். குடியரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், ஆபிரகாம் லிங்கனின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
பகுத்தறிவுப் பணிகள்
மதக் கோட்பாடுகள், மூடநம்பிக்கை மற்றும் அடிமை முறைக்கு எதிராகத் தீவிரமாக வாதிட்டார். பகுத்தறிவு, சுதந்திர சிந்தனை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். கடவுள் மறுப்புக் கருத்துகளை வெளிப் படையாகப் பேசியதன் மூலம், அமெரிக்காவில் ‘சுதந்திர சிந்தனையின் பொற்காலம்’ என அழைக்கப்பட்ட காலகட்டத்தின் முன்னணி நபராக மாறினார். இவரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், உலகெங்கிலும் உள்ள முற்போக்குவாதிகளால் இன்றும் போற்றப்படுகின்றன.
“19ஆம் நூற்றாண்டின் பார்புகழ் பகுத்தறிவு மேதையாவார்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அவர்தம் எழுத்துகளைத் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் புத்தகங் களாக வெளியிட்டு பரப்புரை செய்து வருகின்றன.
இன்றைய பிறந்த நாளில் அவருடைய பகுத்தறிவு சிந்தனை துளிகளில் சில…

*அறியாமையைவிட உலகின் மனித குலத்திற்கு பெரிய நோய் வேறொன்றுமில்லை.
*மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரம் இப்பொழுதே. மகிழ்ச்சியாக இருப்பதற்கான இடம் இங்கேயே. மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே.
*இந்த பூமியில் தைரியத்திற்கான மிகப்பெரிய சோதனை என்பது இதயத்தை இழக்காமல் தோல்வியினை தாங்கிக்கொள்வதே.
* உங்களுக்காக நீங்கள் கோரும் உரிமைகளை, நீங்களும் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுத்திடுங்கள்.
*நம்பிக்கை என்ற தேனீ மட்டுமே மலர்கள் இல்லாமல் தேனை உருவாக்கக் கூடியது.
* நற்குணங்கள் வளரும் இடத்தில், கருணையானது சூரிய ஒளியினைப் போன்றது.
* மனதின் விளக்கை ஊதி அணைக்கக்கூடிய காற்றே கோபம்.
*மனிதனின் உன்னதமான உழைப்பே, ஒரு நேர்மையான கடவுள்.
* சுதந்திரமே முன்னேற்றத்தின் சுவாசம்.
* யாருக்கு ஆர்வம் இல்லையோ அவர்களிடம் செயல்பாடும் இல்லை.
* நீங்கள் பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை விட அதிகமான சுதந்திரத்தை விட்டுகொடுக்க வேண்டும்.
* பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.
* மனசாட்சி இல்லாத தைரியம் என்பது ஒரு காட்டு விலங்கினைப் போன்றது.
பகுத்தறிவாளர் ராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்களின் பிறந்தநாளில் (ஆகஸ்ட் 11,1833) அவருடைய பகுத்தறிவுக் கொள்கைகளை போற்றி புகழ்வோம்!.
*
அண்ணாவின் அமெரிக்கப் பயணம்
அறிஞர் அண்ணா அவர்கள் தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பிய நாள் இன்று (11.08.1964). அவரது இப்பயணமும் அங்கு அவர் நிகழ்த்திய உரைகளும் திராவிடக் கொள்கைகளையும் தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைகளையும் உலகளவில் கொண்டு சேர்க்க முக்கிய காரணியாக அமைந்தன.
தகவல்: பா.வீரமணி
