திண்டுக்கல், ஆக. 4- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர் மனிதக் கழிவைக் கலந்து, எச்சரிக்கை கடிதம் எழுதி வைத்துச் சென்ற நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அய்யலூர் அருகே உள்ள தங்கம்மா பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியின் மொட்டை மாடியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று வழக்கம்போல மாணவர்கள் குடிநீர் தொட்டிக்குச் சென்றபோது, தொட்டியின் உள்ளே பிளாஸ்டிக் கவரில் மனிதக்கழிவு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
குடிநீர் தொட்டியின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒட்டிச் சென்ற எச்சரிக்கை துண்டுச் சீட்டில் “என் ஒரு குடியைக் கெடுத்தால் பள்ளிக்கூடத்தில் அத்தனை பிள்ளைகள் குடியையும் கெடுத்து விடுவேன். சும்மா விடமாட்டேன். பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை!” என்று எழுதப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த வடமதுரை காவல் துறையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வேடசந்தூர் தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் வந்து குடிநீர் தொட்டியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நிகழ்வு இடத்திலிருந்து முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் குழுவினர் தொட்டியில் இருந்த குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
பள்ளித் தலைமையாசிரியை சந்திரபிரபா அளித்த புகாரின்பேரில் வடமதுரை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்து அச்சுறுத்தல் விடுத்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
