திண்டுக்கல், ஆக.2 பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாகத் தனியாருக்கு விற்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஅய்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் ஏற்ெகனவே கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகிய 4 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் சிபிசிஅய்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு வரும் 5-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வெள்ளத்துரையின் பிணை மனுவை நீதிபதி பாக்கியராஜ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சேதுபதியின் பிணை மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த நில புரோக்கரும், பத்திர எழுத்தருமான ஜெயபிரகாஷ் என்பவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர் கடந்த ஜூலை 29 அன்று மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிமாநிலத்திற்குத் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரின் இருப்பிடத்தை அறிந்து கைது செய்ய சிபிசிஅய்டி சிறப்புத் தனிப்படையினர் வெளிமாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், கடந்த 2025 ஜனவரி மாதம் குஜிலியம்பாறையிலும், 2025 பிப்ரவரி முதல் 2026 ஜூன் வரை ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார். இவர் இங்குப் பணியாற்றிய காலகட்டத்தில் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பத்திரப்பதிவு துறை டிஐஜி சுவாமிநாதன் தலைமை யிலான குழுவினர், ஒட்டன்சத்திரம் மற்றும் குஜிலியம்பாறை ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நேற்று (1.8.2026) நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
