ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு – சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தகவல்

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுக்கோட்டை, மார்ச் 12 மாநிலப் பட்டியலில் 34-ஆவது பிரிவின்  படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உண்டு என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘இணைய வழி சூதாட்டத்திற்காக சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டமுன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். அது வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். ஆளுநர்  இதனை மத்திய பட்டியல் 31 என கூறி இருக்கிறார், ஆனால் இணையவழி சூதாட் டம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் மாநில பட்டியல் 34-இல் வருவதால் இது குறித்து சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு முழு  அதிகாரம் உண்டு.  

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மிகத் தெளிவாக இதுகுறித்து சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றால் அதை உயர்நீதிமன்றமே சொல்லி இருக்கும். முன்மாதிரியான ஒரு சட்டமாக, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சட்டமாக, இணையவழி சூதாட்டத்தை ஒழிக்கக் கூடிய சட்டமாக இணைய விளையாட்டுகளை முறைப் படுத்துவதற்குமான சட்டமாக சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து  சட்ட முன் வரைவைத்  தயாரித்து தாக்கல்  செய்தோம். ஆளுநர் ஒரு முறை தான் இந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கெனவே விளக்கம் கேட்டார். விளக்கம் கொடுத்து உள்ளோம். மீண்டும் இரண்டாவது முறையாக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளோம். இருக்கின்ற சட்டப்படி நாங்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதெல்லாம் எடுத்து உள்ளோம்.  ஆளுநர் எல்லா ஊர்களுக்கும் போய்  வருகிறார். பாஜக வினரை சந்தித்து வருகிறார்.  ஆதனால் கோப்புகளை பார்ப்பதற்கு நேரமில்லை என்று கருதுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *