ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேர் கைது

Viduthalai
1 Min Read

அரசியல்

கோவை, மார்ச் 13- ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்து ஊட்டி சென்றார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு 12.3.2023 அன்று காலை ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை நோக்கி வந்தார். இந்த நிலையில், கோவை வரும் ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அந்த கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நிர்வாகிகள் கோவை -அவினாசி ரோடு சித்ரா சிக்னல் அருகே கருப்பு கொடியுடன் திரண்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினர், ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றதாக அந்தக் கட்சியை சேர்ந்த 48 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து சி.பத்மநாபன் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர், இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக பேசி வருகிறார். காரல்மார்க்ஸ் தொடர்பாக தவறான தகவலை கூறிய அவர், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்யும் மசோதாவுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

 எனவே தமிழ்நாட்டில் ஆளுநர் எந்த பகுதிகளுக்கு செல்கிறாரோ அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி எங்கள் கட்சி சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *