திருச்சி, ஜூலை 22– திருச்சிராப் பள்ளி அண்ணா ஸ்டேடியம் (காஜாமலை) மய்தானத்தில் ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் அத்லெட்டிக்ஸ் அகாடமி மற்றும் டாக்டர் நல்லுசாமி அண்ணாவி அத்லெட்டிக்ஸ் அகாடமி இணைந்து நடத்திய 19ஆவது ஜூனியர் தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இப்போட்டிகளில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் எஸ்.அரிஹரன், 600 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவில் பங்கேற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மிக நேர்த்தியான திறமையை வெளிப்படுத்திய அவர், நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 1:46.583 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி உள்ளார்.
மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல் பட்டு வெற்றி பெற்று, பள்ளிக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவர் எஸ். அரிஹரனையும், அவருக்குத் தகுந்த பயிற்சி அளித்து வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல் மற்றும் சவும்யா ஆகியோருக்கும் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
