கடந்த சில மாதங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுமார் 100 முதல் 120 பேர் வரை பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இந்தியாவின் தற்போதைய சந்திரயான்-3, ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றிய சில மூத்த விஞ்ஞானிகளும் பதிவி விலகியதாகச் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து அதனை அவசர நடவடிக்கையாக விண்வெளித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டி ருக்கிறது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது
அதில் ககன்யான் மற்றும் நாட்டின் பிற முக்கிய விண்வெளி திட்டங்களில் பணியாற்றும் ‘குரூப் ஏ’ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் பதவி விலகல் அல்லது விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை இனி வழக்கமான ஒன்றாக கருதி உடனடியாக ஏற்றுக்கொள்ள கூடாது. அதனை கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். முக்கியத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், தங்களது பொறுப்பில் உள்ள திட்டங்கள் அல்லது பணிகள் முழுமையாக முடிவடையும் வரை பணியில் நீடிக்கவேண்டும். அதுவரை அவர்களது பதவி விலகல் விண்ணப்பங்களை மய்ய இயக்குநர்கள் அங்கீகரிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2020 நவம்பர் 25-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ‘குரூப் ஏ’ அதிகாரிகளின் பதவி விலகல் அந்தந்த இஸ்ரோ மய்யங்களின் இயக்குநர்களே நேரடியாக ஏற்று ஒப்புதல் அளிக்க அதிகாரம் இருந்தது. புதிய சுற்றறிக்கை அதனை ரத்து செய்து, விண்ணப்பங்களை இயக்குநர்களின் பரிந்துரைகளுடன் டில்லியில் உள்ள விண்வெளித்துறையின் (டி.ஓ.எஸ்.) இறுதி முடிவுக்காக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்
இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தனியார் விண்வெளி நிறுவனங்களின் ஈர்ப்பால் பணியில் இருந்து விலகுவதாக கூறப்படும் நிலையில், இந்த சுற்றறிக்கை மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுக்குப் பிடித்த நேரத்தில் உடனே பணியைவிட்டு வெளியேற முடியாதபடி, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை இஸ்ரோவிடமிருந்து விண்வெளித்துறை (அரசாங்கம்) நேரடியாக தன் கைக்கு மாற்றியிருக்கிறது.
இஸ்ரோ உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளிப் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்துவரும் சூழலில், அதன் தொழில்நுட்பமும், விஞ்ஞானிகளும் உலக அளவில் மதிக்கப்படுகிறார்கள். அந்த அரிய மனிதவளத்தைக் காப்பதற்காகவே அரசாங்கம் தற்போது இந்த புதிய கட்டுப்பாட்டு விதியை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
