சென்னை, ஜூலை 13– சென்னை கோயம்பேடு பழைய பேருந்து நிலைய பகுதிக்கு, தலைமை செயலகத்தை மாற்றுவது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்பேடில், 2002ஆம் ஆண்டு 36 ஏக்கர் பரப்பளவில், புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இது, 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
இங்கிருந்து, புதுச்சேரி, கருநாடகா, கேரளம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. புறநகர் பேருந்து நிலையத்திற்கு வெளியே, மாநகரப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இங்கிருந்து, சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத் திற்கு மாற்றாக, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலை யத்தில், வணிக வளாகம், பன்னோக்கு மய்யம் கட்டடம், சி.எம்.டி.ஏ., வாயிலாக திட்டமிடப்பட்டது.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வணிக வளாகத்திற்கு மாற்றாக, புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, ஆரம்பக் கட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலைமைச் செயலகத்தில் தற்போது இடநெருக்கடி அதிகரித்து உள்ளது. அதிகாரிகள், அலுவலர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக, தலைமைச் செயலகம் வந்து செல்வதிலும், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, கோயம்பேடில் உள்ள, பழைய பேருந்து நிலையத்தில், தலைமைச் செயலகம் கட்டலாம் என, அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், முதலமைச்சரிடம் கூறியுள்ளனர்.
பேருந்து நிலையம் அருகில், அரும் பாக்கம், நெற்குன்றம், விருகம்பாக்கம் சுற்றுப் பகுதிகளில், அய்.ஏ.எஸ்., அதிகாரி கள் வசித்து வருகின்றனர். கோயம்பேடில் தலைமை செயலகம் கட்டினால், அதிகாரிகள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.
வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு, பேருந்து வசதி மற்றும் மெட்ரோ ரயில் வசதி உள்ளது. முதலமைச்சர் அனுமதி அளித்தால், இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதற்கு, 350 கோடி ரூபாய் வரை செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
