புதுடில்லி, ஜூலை 8 கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் (NEET) தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அத்தேர்விற்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்களுக்குத் திருப்பி வழங்கும் பணியை தேசிய தேர்வு முகமை (NTA) மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றோடு (ஜூலை 7) முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி இந்த அவகாசத்தை மேலும் நீட்டித்து தேசிய தேர்வு முகமை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்
விண்ணப்ப தாரர்கள் வரும் 14-ஆம் தேதி இரவு வரை கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
மேற்கொள்ள வேண்டிய பணிகள்: மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய்யவும், ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றை இணையதளத்தில் திருத்தம் செய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டணத் தொகையைச் சரியாகப் பெற்றுக் கொள்ள, கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் வங்கி விவரங்களை விரைந்து சரிபார்க்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு முடக்கம் ரத்து
டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 8 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஒட்டுண்ணி மற்றும் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மே 15-ஆம் தேதி ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற நையாண்டிக் குழு சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே ஏராளமான இளைஞர்கள் இக்குழுவில் இணைந்த நிலையில், ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் கடந்த மே 21-ஆம் தேதி இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) கணக்கு முடக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் இந்த முடக்க உத்தரவை எதிர்த்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் நடைபெற்றது.
நீட் தேர்வைக் காரணம்
காட்டிய அரசுத் தரப்பு
விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில்:
“கடந்த ஜூன் 21-ஆம் தேதி நீட் (NEET) மறுதேர்வு நடைபெறவிருந்தது. அதற்கு முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வீண் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே கரப்பான் பூச்சி கட்சியின் சமூக ஊடகக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது” என்று விளக்கமளித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி ஸ்வர்ண காந்தா நேற்று (7.7.2026) தனது தீர்ப்பை வழங்கினார். அதில்:”தற்போது நீட் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.எனவே, இனிமேல் இதனால் எந்தவொரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையோ அல்லது குழப்பமோ ஏற்பட வாய்ப்பில்லை. இதனைக் குறிப்பிட்டு, ஒன்றிய அரசின் முடக்க உத்தரவை ரத்து செய்த நீதிபதி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு மீண்டும் உடனடியாகச் செயல்பட அனுமதி வழங்கி உத்தர விட்டார்.
