சென்னை, ஜூலை 6- ஈரோடு – கரூர் இரட்டைப் பாதை திட்டப்பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு – கரூர் இடையே இரட்டைப் பாதைப் பணிகளுக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான, தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யும்போது, படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த இரட்டைப் பாதை முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஈரோடு – கரூர் – திருச்சி தடத்தில் ரயில்களின் தாமதத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “ஈரோடு – கரூர் இரட்டைப் பாதைத் திட்டம், இந்த பகுதியின் பயணிகளின் நீண்ட காலத் திட்டமாகும். இந்த திட்டப்பணி மேற்கொள்ள ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதன்வாயிலாக, ஈரோட்டில் இருந்து பல இடங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். மேலும், கோவையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயிலை போடிநாயக்கனூர் வரை நீட்டித்து இயக்க வேண்டுமென தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
