“மானமிகு ஆசிரியர்” நீடு வாழ்க!

1 Min Read

அரசியல்

“முடியும்வரை கடமைகளைச் செய்வேன்!” என்றே

முழுவீச்சில் இறங்குகின்றார்! மூச்சு நின்று

“மடியும்வரை ஓய்வில்லை பணியில்!” என்றே

மானமிகு ஆசிரியர் முழங்கு கின்றார்!

இடியும்வரை, ஆதிக்கத் தடைச்சு வர்கள்

இல்லாமல் போகும்வரை, எனது தாய்மண்

விடியும்வரை என்தொண்டு தொடரும் என்றே

விடுத்தார்!போர்ப் பிரகடன அறிக்கை இன்றே!

போகிறது காலநதி புதுவே கத்தில்!

பொறுப்பேற்றுக் கருஞ்சட்டைப் படைந டத்தி

ஆகிறது “நாற்பத்தைந்து ஆண்டு”என் றாலும்,

அழகுகுன்றா இளமையுடன் சுழலு கின்றார்!

சாகிறது சனாதனநோய்க் கிருமி யெல்லாம்!

சமர்புரியும் “ஆசிரியர்” சக்தி கண்டே

வேகிறது வெறிப்பகைவர் நெஞ்ச மெல்லாம்!

“வீரமணி” ஒலிக்கிறதே தமிழ்நா டெங்கும்!

நெற்றிக்கண் பழைமைகளை ஞானக் கண்ணின்

நெருப்பாலே சுட்டெரித்தார் பெரியார்! அந்த

வற்றாத பகுத்தறிவுக் கனலை ஏந்தி

வலம்வரும்நம் “ஆசிரியர்”  எட்டுத் திக்கும்

சுற்றித்தன் பரப்புரையை நிகழ்த்து கின்றார்!

சுயமரியா தைப்பயணம் நடத்து கின்றார்!

வெற்றிக்கு மறுதொடக்கம்! சமூக நீதி

விடுதலைக்குப் பூபாளம் அவர்மு ழக்கம்!

வளமார்ந்த கருத்துக்கள்! தெளிந்த சொற்கள்!

வாதத்தில் அனல்கக்கும் ஆதா ரங்கள்!

உளமார்ந்த கொள்கையைஉள் வாங்கிக் கொண்டே

உலாவரும் “தாடியில்லாப் பெரியார்” இன்றும்

களமாடி வருகின்றார் உரிமைப் போரில்!

கலைஞர்வழி நடைபோடும் நல்லாட் சிக்கோர்

இளம்வீரன் தினவைப்போல் தோள்கொ டுத்தே

“இனமானத் தளபதி”க்குத் துணைநிற் கின்றார்!

பட்டுமலர் விரிப்பல்ல! கடந்து வந்த

பாதையெங்கும் விஷமுட்கள்! வசைக்கூச் சல்கள்!

அட்டணக்கால் இருக்கைதரும் வரவேற் பல்ல!

அழுகியவீண் முட்டையுடன் அமில வீச்சு!

விட்டொதுங்கிப் போகவில்லை எதிர்ப்பைக் கண்டே!

“வெண்தாடிச் சூரியனின்” படையில், உச்சம்

தொட்டு,அகவைத் தொண்ணூறைத் தொடப்போ கின்றார்!

” தொண்டுசெய்து பழுத்தபழம்” இவரும் ஆனார்!

பாழடைந்த தமிழ்நாட்டைப் புதுப்பிக் கின்ற

பணியில்நம் “முதல்வருடன்” கைகள் கோர்த்துத்

தோழமையின் ஆளுமையை வழங்கி வாழ்க!

துள்ளலுடன் துடிப்புடனே இயங்கி வாழ்க!

வாழ்க!எங்கள் “ஆசிரியர்” நீடு வாழ்க!

வருங்காலப் பொன்னேட்டு வரலாற் றுக்குத்

தாழ்திறந்த பெருமகனார் இனிது வாழ்க!

தாய்க்கழகப் பெருமையுடன் தமிழ்போல் வாழ்க!!

– கவிச்சுடர் 

கவிதைப்பித்தன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *