கொச்சி, ஜூன் 19 பெண்கள் பாதுகாப்பு இன்றைய காலத்தில் அதிகம் பேசப்படும் பேசு பொருளாக மாறியுள்ளது. 3 வயது பெண் குழந்தைகளையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் இந்த மோசமான காலக்கட்டத்திலும், விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற வியாபாரி ஒருவர் தன் வேட்டியை வழங்கினார். மனிதநேயம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை பறைசாற்றும் வகையில்நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
விபத்தில் சிக்கிய பெண்
கேரள மாநிலம் கொச்சி திரிபுணித்துறை ஸ்டேச்சு ஜங்ஷன் பகுதியில் கைக்கடிகாரம் வியாபாரம் செய்பவர் ஷாஜி. நேற்று முன்தினம் (17.6.2026) அவர் வழக்கம்போல வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒரு பெண்ணின் மீது மோதியது. இதில் அந்த பெண் பஸ்சின் அடியில் சிக்கினார். நல் வாய்ப்பாக சக்கரங்களில் சிக்காமல் உயிர் தப்பிய அவரை, அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு மீட்டனர். விபத்தை நேரில் பார்த்த ஷாஜி முதல் ஆளாக ஓடிச்சென்று உதவினார். பெண்ணின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. எழுந்து நிற்க முடியாமல் சங்கடப்பட்டார். அதேநேரம் அந்த பெண்ணின் ஆடை கிழிந்து இருந்தது. தர்மசங்கடமான நிலையில் அந்தப் பெண் மானத்தை மறைக்க கைகளால் உடலை மறைக்க போராடினார். உதவிக்கு வந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்ற நிலையில் அவரது நிலை மேலும் சங்கடமாகவே இருந்தது.
வியாபாரியின் மனிதநேயம்
அதே நேரத்தில் உதவிக்கு வந்த ஆண்கள் பலரும் பேண்ட், சட்டை அணிந்திருந்தனர். அப்போது வியாபாரியான ஷாஜி, மட்டுமே வேட்டி அணிந்திருந்தார். உடனடியாக, அவர் எந்த தயக்கமும் இன்றி தனது வேட்டியை கழற்றி அந்த பெண்ணின் உடலை மூடிக்கொள்ள உதவினார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு படக்கருவிகளில், பதிவாகி இருந்தது. அது சமூக வலைத்தளங்களில் பரவியதால் அவருக்கு பரவலாக பாராட்டு கிடைத்தன. ஷாஜியின் மனிதநேயத்தை அனைவரும் பாராட்டினர்.
அவரது இந்த செயலை சமூக ஊடகங்களில் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள்.
