ரேபரேலி, மே 21 ‘‘பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக) ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்து நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. தேசத்தின் நலனைக் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு அவர்கள் விற்கின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேசத் துரோகிகள்’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று (20.5.2025) நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் வீர பாசி நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:
சட்டமேதை அம்பேத்கர், காந்தியார், சுதந்திரப் போராட்ட வீரர் வீர பாசி ஆகியோர் எதற்காகப் போராடினார்களோ, அந்தச் சித்தாந்தம் தற்போது முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. நம் கண் முன்னாலேயே அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தைப் பலவீனப்படுத்துவது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பது, அம்பானி, அதானி போன்ற குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்குச் சாதகமான முடிவுகளை மேற்கொள்வது என 24 மணி நேரமும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடி தாக்குதல் நடத்தி வருகிறார்.
விலைவாசி உயர்வு அபாயம்
எரிபொருள் நுகர்வு, தங்கம் வாங்குவது மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அண்மையில் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, அடுத்த கணமே 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள் ளார். வரும் மாதங்களில் நாட்டில் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவு தானியங்களின் விலை பன்மடங்கு உயரும். உரத் தட்டுப்பாடு மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத் தடையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நாசகரப் பொருளாதார பாதிப்புகள் சாதாரண மக்களைத்தான் கடுமையாகப் பாதிக்கும்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள ‘ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு’ என்ற உரிமையையும் மோடி அரசு சிதைத்துள்ளது. வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், பாஜகவுக்கு வாக்களிக்காத கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் உங்கள் வீட்டுக்கு வரும்போது, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நாட்டின் துரோகிகள் என்பதை நீங்கள் எடுத்துக்கூற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.
