அமெரிக்காவின் மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கி சூடு – 3 பேர் உயிரிழப்பு
வாசிங்டன், மே 19- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று (அந்நாட்டு நேரப்படி) வழிபாடு நடந்துகொண்டிருந்தது. இந்த வழிபாட்டில் சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த வழிபாட்டு தலத்திற்குள் திடீரென 2 பேர் துப்பாக்கியுடன் நுழைந்தனர். பின்னர், வழிபாட்டு தலத்தில் இருந்தவர்கள் மீது இருவரும் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், சம்பவம் நடந்த மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் 17 வயது சிறுவன், 18 வயது இளைஞன் ஆகிய இருவரும் துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
தற்கொலை செய்துகொண்ட இருவரும் மசூதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞர் மேயராகத் தேர்வு
லண்டன், மே 19- இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் துஷார்குமார் (வயது 23). இந்திய வம்சாவளியான இவர் இங்கிலாந்து நகரமான எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தின் மிக இளவயது இந்திய வம்சாவளி மேயர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர், நகராட்சியின் ஆண்டு விழாவில் முறைப்படி மேயராக பொறுப்பேற்றார். தனது 20ஆவது வயதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட துஷார், வாக்கு மறுசீராய்வுக்குப் பிறகு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டதாரியான இவரது தாய் பர்வீன்ராணியும் துணை மேயராக இருந்தவர் ஆவார். மேயராக பொறுப்பேற்ற துஷார்குமார், இந்த வாய்ப்பு தனது வாழ்நாளின் பெரும் பாக்கியம் என்று கூறினார். மேலும் அவர் உள்ளூர் ஜனநாயகத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினர் அதிகளவில் பங்கேற்க ஊக்குவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவில் பயங்கர நிலநடுக்கம்:
2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்!
2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்!

பெய்ஜிங், மே 19- தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள லியூசோ நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. சுமார் 13 கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இதனிடையே பாதுகாப்பு கருதி நகரில் இருந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 4 பேர் காயமடைந்தனர். 2 பேர் பலியாகி உள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி உயிரிழப்பு!
வாசிங்டன், மே 19- தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்யா கடுசு (25). இவர் சிகாகோவில் தங்கி உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு (மே 16) நவ்யா கடுசு தன் நண்பர்கள் 6 பேருடன் இண்டியானா மாகாணம் லேக் கவுன்டிக்கு சிறிய வேனில் சென்றார். கிரவுன் பாயின்ட் நகருக்கு அருகிலுள்ள இன்டர்ஸ்டேட் 65 என்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் சிறிய வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிலைகுலைந்த சிறிய வேன் சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்னாது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நவ்யா கடுசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
