கோயிலுக்கு ‘பாதயாத்திரை’ சென்ற பத்து வயது சிறுவனை கொன்று உடலை தின்ற சிறுத்தை
மேட்டூர், மே 11 தமிழ்நாடு எல்லையான பாலாற்றில் இருந்து, சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. மாதேஸ்வரன் மலைக்கோயில். கருநாடக மாநிலத்தில் உள்ள இந்த கோயிலுக்கு, தமிழ்நாட்டில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கருநாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து, மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு ‘பாத யாத்திரை’யாக வந்த பக்தர் ஒருவரை, தாளபெட்டா என்ற இடத்தில் சிறுத்தை தாக்கி கொன்றது. அதற்கு அடுத்த சில நாள்களில், அதே பகுதியில் சுமார் 12 வயது சிறுவனை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு இரு சக்கர வாகனங்களில் செல் லவும், யாத்திரையாக செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக, தமிழ் நாட்டில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இந்நிலையில், நேற்று (10.5.2026) காலை மாதேஸ்வரன் மலை கோயிலில் வழிபாடு முடித்து விட்டு, சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள நாகமலையில் வழிபாடு செய்ய அந்தரகங்கை வழியாக கருநாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த பக்தர்கள் சென்றுள்ளனர். அப்போது ஹர்சித் என்ற 10 வயது சிறுவன், இயற்கை உபாதையை கழிக்க சற்று மறைவான இடத்திற்கு சென்றுள்ளான்.
அந்த நேரத்தில் அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, சிறுவனை தாக்கி கவ்விச்சென்றது. இதை பார்த்து அலறிய சிறுவனின் உறவினர்கள் கூச்சலிடவே, சற்று தொலைவில் பாறை இடுக்கில் சிறுவனை போட்டு விட்டு சிறுத்தை தப்பி ஓடி விட்டது. ஆனால், சிறுத்தை கடிதத்தில் கழுத்தில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோர சம்பவத்தால், சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியதால், மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு ‘பாத யாத்திரை’ செல்லும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களை சிறுத்தை தாக்கி கொன்றது, இது மூன்றாவது சம்பவம் ஆகும். அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நுழைவதும், பக்தர்களை தாக்கி கொல்வதும் அதிகரித்து வருகிறது. நாகமலை போன்ற பாதயாத்திரை செல்லும் பகுதிகளில், பக்தர்களை பாதுகாக்க கருநாடக வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கண்காணிப்புப் படக் கருவிகளைப் பொருத்தியும், எச்சரிக்கை பலகை வைத்தும் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
